விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு கோபி வருகிறார். பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசி கொண்டு வெளியே வருகிறார்கள். அப்போது கோபி பாக்கியாவை பார்த்து கேவலமாகப் பேசுகிறார். "நீ செய்யும் தில்லாலங்கடி வேலையை பார்க்க தான் வந்தேன். இப்போ தான் சந்தோஷமா இருக்கேன்னு சொல்ற, வீட்டில அப்படியே கண்ணகியாட்டம் பெரிய நடிப்பை காட்டுற" என மோசமாக பேசுகிறார் கோபி. 


பாக்கியாவை, பழனிச்சாமி கிளாஸ் உள்ளே அனுப்பிவிட்டு "எங்க அண்ணா போறீங்க. இங்க வாங்க அண்ணா. பிள்ளைங்க படிக்கிற இடம் இங்க வந்து சண்டை போட்டா போலீசை கூப்பிடுவாங்க. மேடம் இவரு யாரு என்றே தெரியாது என சொல்லிடுவாங்க. நீங்க பேசுறது புடிக்காம போலீஸ் உங்களை கூட்டிட்டு போய் நல்ல கவனிப்பாங்க" என சொன்னதும் கோபி “இருக்கட்டும் நான் பாத்துக்குறேன்” என சொல்லிவிட்டு கிளம்புகிறார். 


 



பாக்கியா, பழனிச்சாமியிடம் கோபி செய்வதை பார்த்து மனசு சங்கடப்பட்டு பேசுகிறாள். “அவரோட வாழும் போது தான் என்னை சந்தோஷமா வாழ விடவில்லை. இப்போ தான் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என ஆகிவிட்டது. இப்பவும் ஏன் என்னை இப்படி தொந்தரவு செய்கிறார் என புரியவில்லை. அவர் இப்படி பண்ணும் போது தான் எனக்கு மேலே மேலே போகணும் என ஆசை வருகிறது” என சொல்கிறாள் பாக்கியா. 
 
கோபி நேரடியாக பழனிச்சாமியின் வீட்டுக்கு போய் பழனிச்சாமியின்  அம்மாவிடம் பேசுகிறார். நான் சொன்னதை பத்தி உங்க பையனை கண்டிசீங்களா என கேட்கிறார். "நான் ஏன் பழனியை கண்டிக்கணும். அவங்க இரண்டு பேரும் வயசுல பெரியவங்க. விஷயம் தெரிஞ்சவங்க. என்ன பண்ணனும் பண்ண கூடாதுனு தெரியாதா" என்கிறார் பழனியின் அம்மா. "நீ பேசிட்டு போனதுக்கு அப்புறம் தான் பழனிக்கும் பாக்கியாவும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என தோணுச்சு" என அம்மா சொன்னதும் கோபி ஷாக்காகிறார். 


 



 


“உங்க கிட்ட போய் நியாயம் கேட்க வந்தேனே, நானே என்னோட பிரச்னையை பார்த்துக்குறேன்” என சொல்லி வெளியே செல்ல பழனிச்சாமி எதிரே வருகிறார். கோபியை விடாப்பிடியாக அழைத்து சென்று “சாப்பிடுங்க அண்ணா” என சொல்லி வகைவகையாக உணவை பரிமாறுகிறார்.  “நான் ஏன் உன்னோட வீட்டில் சாப்பிடணும். எனக்கு உன்னை பார்த்தாலே பிடிக்காது” என கோபமாக சொல்லிவிட்டு வெளியே வந்து “அப்பப்பா எவ்வளவு வெரைட்டியா சாப்பாடு” என புலம்பி கொண்டே செல்கிறார் கோபி. 


காலேஜில் இனியா ப்ரெண்ட்ஸ்களுடன் உட்கார்ந்து பேசிகொண்டு இருக்கிறாள். அப்போது பாக்கியா வந்து அவர்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கிறாள். ‘எழில் வரலையா’ என பாக்கியா கேட்க, ”இல்ல அப்பா வருவாரு” என இனியா சொல்ல, அங்கே கோபி வந்து இனியாவை அழைத்து செல்கிறார்.


காரில் ஏறியதும் “எதுக்கு தான் பாக்கியாவுக்கு இந்த தேவையில்லாத வேலை. இப்படி கிடக்குற நேரத்தில் எல்லாம் ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்தா எப்படி அவ குடும்பத்தையும் உன்னையும் கவனிச்சுக்குவா” என இனியாவை ஏத்தி விடுகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.