டிவியில் நடிப்பவர்கள் எல்லாம் நல்லா வசதியா தான் இருப்பாங்க என்று நம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, மருத்துவச் செலவுக்குக்குப் போதிய பணம் இல்லாமல் இறுதி நாட்களில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நடிகர் வடிவேல் பாலாஜி.


சின்னத்திரை நடிகரும் பிரபல நகைச்சுவையாளருமானவர் வடிவேல் பாலாஜி மதுரைக்காரர். சினிமாவில் நடிக்க சென்னை வந்த இவர், பல போராட்டங்களுக்குப் பிறகு திரையில் பிரபலமானார். வெள்ளித்திரையில் நிறைய படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், சின்னத்திரையே இவருக்கு புகழாரத்தைத் தேடி தந்தது. 'அது இது எது' , 'கலக்கப்போவது யாரு' ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மக்கள் உள்ளத்தை கைப்பற்றினார். சாகும் வரை விஜய் டிவி பிரபலமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி.


2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் நாள் மாரடைப்பால் காலமானார். அப்போது இவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்வதாக அவர் வேலை செய்த தொலைக்காட்சி நிறுவனமும் தெரிவித்திருந்தது. வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ. இருவரின் கல்வி செலவுகளை முழுவதுமாக தான் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர் குடும்பத்தினரிடம் வாக்களித்தார். அந்த வாக்கை நிறைவேற்றியும் வருகிறார் சிவகார்த்திகேயன்.


விஜய் டிவியில் 'அது இது எது' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது அதில் சிரிச்சா போச்சு சுற்றில் வடிவேல் பாலாஜி நடித்து வந்தார். அப்போதிலிருந்தே இவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம். 




வடிவேல் பாலாஜி குடும்பத்தின் தற்போதைய நிலை :


இந்நிலையில் தனியார் youtube சேனல் ஒன்று வடிவேல் பாலாஜியின் குடும்பத்தாரின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ள நேரில் சென்றிருக்கிறது. அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வடிவேல் பாலாஜி வாழ்ந்த வீடு தற்போது இடிந்த நிலையில் உள்ளது. இடிந்த சுவர்கள், கூரைமேல் தார்ப்பாய் என மிக மோசமான நிலையில் இருக்கிறது. அவரது குடும்பம் அந்த வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தற்போது குடியிருக்கின்றனர். அவர் மனைவி ஜோதிலட்சுமியிடம் அவர்கள் இது குறித்து பேசியபோது, கணவர் இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. அதனால் அதிகம் வெளியில் செல்வதும் இல்லை என்றும், அனைவரும் இருக்கிறார்கள்; அவர் மட்டும் இல்லை என்றும்  கண்கலங்கி இருக்கிறார் அவரது மனைவி. மேலும் அவர், நன்றாகத் தான் இருக்கிறோம். சேனலில் இருந்து உதவி செய்கிறார்கள். அவர் இல்லாத சோகம் தான் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் முகத்தில் இனம் புரியாத தயக்கமும் கவலையும் அவர்களுக்கு தெரிந்துள்ளது.


உண்மையை உரக்கச் சொன்ன அக்கம் பக்கத்தினர் :




இதனால் அக்கம் பக்கத்தினரிடம் அந்த குடும்பத்தின் நிலை பற்றி தனியார் யூடியூப் சேனல் பேட்டி எடுத்திருக்கிறது. அப்போது அவர்கள் அளித்த பதில்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தினமும் இரண்டு வேளை உணவிற்கு கூட கஷ்டமாக இருக்கிறது என்று அக்கம்பக்கத்தினரிடம் அவரது மனைவி கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


உதவி செய்வதற்கு சொந்தபந்தம் யாரும் இல்லை. அவரது மனைவி ஜோதிலட்சுமி வேலைக்குச் செல்ல போவதாக கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட தனியார் யூடியூப் சேனல் வடிவேல் பாலாஜியின் மனைவிக்கு உதவி செய்ய முன் வந்ததாகவும், அதை அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சேனலில் இருந்து தற்போது வரை வடிவேல் பாலாஜியின் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார்களா? அவர்கள் பார்த்துக் கொண்டாலும் ஒருவேளை இவர்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லையா?  என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் தற்போது எழுந்துள்ளது.