தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு படங்கள் மோதிக் கொள்வது இயல்பான நிகழ்வு. ஆனால், ஒரே வருடத்தில் அதுவும் ஒரே நாளில் முன்னணி ஹீரோக்கள் ஐந்து பேரின் படங்கள் வெளிவந்துள்ளன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? விஜய், சூர்யா, விக்ரம், விஜயகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோரின் படங்கள் 2001 ஆம்  ஆண்டு, இதே நாளில் வெளிவந்துள்ளது. அந்த படங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். 


குடும்பங்கள் கொண்டாடிய தவசி:


2000 ஆண்டுகளில் முன்னணி நடிகராகவும், மக்களுக்கு மிகப்பிடித்த நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். 2001 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்த தவசி படத்தில், விஜயகாந்த் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க, இவருடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார் வைகைப் புயல் வடிவேலு. விஜயகாந்துக்கு ஜோடியாக மறைந்த நடிகை செளந்தர்யா நடித்திருந்தார்.  காமெடி, சென்டிமன்ட், சண்டை, காதல் என கம்ப்ளீட் பேக்கேஜாக உருவாகியிருந்தது தவசி திரைப்படம்.  இதனாலேயே, தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களின் லிஸ்டில் முக்கிய இடத்தில் உள்ளது தவசி. அந்த காலத்திலேயே அன்டர் ரேட்டன் இசையமைப்பாளராக இருந்த வித்தியாசாகரின் இசையில், பாடல்கள் அனைத்தும் இன்று வரை அனைவர் மனதிற்கும் இதமாக இருக்கிறது. 


ஒரு தலை காதலர்களுக்காக ஷாஜஹான்:


தமிழ் படங்கள் மட்டுமன்றி, எந்த படமாக இருந்தலும் கடைசியல் நாயகனும் நாயகியும் சேர்ந்தால்தான் ரசிகர்கள் முழு மனதோடு திரையரங்கை விட்டு வெளியே வருவார்கள். அப்படியிருக்கையில், காதல் வயப்படும் அனைவருக்கும் காதல் கை கூடுவதில்லை என்ற விஷயத்தை மனதில் வலியை ஏற்படுத்தும் அளவிற்கு கூறிய படம்தான் ஷாஜஹான்.




2000 முதல், குஷி, பிரியமானவளே, பத்ரி, ஃப்ரண்ட்ஸ் என காதல் ஹீரோவாக பல ஹிட் கொடுத்த நடிகர் விஜய், இப்படத்தில் ஒரு தலையாக ஒரு பெண்ணை காதலிக்கும் ஹீரோவாக வந்தார். க்ளைமேக்ஸில் தன் காதலை இழந்த பின்பும், “உண்மையான காதல்னா சொல்லு, உயிரக் கூட கொடுக்குறேன்” என இவர் பேசிய டைலாக்கிற்கு நிறைய பேர் சிலிர்த்துப் போய் சில்லறைகளை சிதறவிட்டனர். கே எஸ் ரவியின் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருந்தது. மணி ஷர்மாவின் இசையில், “மின்னலை பிடித்து மின்னலைப் பிடித்து..” பாடல் இன்று வரை பல ஒன் சைட் லவ்வர்ஸிற்கு ஃபேவரட் ஆக உள்ளது. 


நந்தா படத்தில் புது விதமான ரக்கட் பாயாக சூர்யா:


மனதில் கனத்தை தரும் படங்களை எடுப்பதில் வல்லவர், இயக்குனர் பாலா. ராமேஷ்வரத்தில் தன் தந்தை கொன்ற குற்றத்திற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படும் சிறுவனிமிருந்து ஆரம்பிக்கும் படம், க்ளைமேக்ஸில் இதயத்தை பதைபதைக்க வைக்கும் அளவிற்கு, எதிர்பார்க்காத திருப்பத்துடன் நிறைவடையும்.




இதில், மனம் முழுக்க கோபத்தையும், முகத்தை இருக்கமாகவும் படம் முழுக்க வரும ஹீரோவாக கலக்கியிருப்பார் நடிகர் சூர்யா. இவரைக் காதலிக்கும் பெண்ணாக லைலா வந்திருப்பார். இவர்கள் மட்டுமன்றி, ஹீரோவிற்கு எந்த சமையத்திலும் துணையாக நிற்கும் லொடுக்கு பாண்டியாக கருணாஸ் அறிமுகமாகியிருப்பார். யுவனின் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதை அள்ளின. தமிழ் சினிமாவின் பொக்கிஷமான படங்களில் நந்தாவும் ஒன்று. 


 


கண் பார்வையற்றவரின் பயணத்தைக் கூறிய காசி:


சியான் விக்ரமின் நடிப்பிற்கு சிறந்த உதாரணமாக கூறப்படும் பல படங்களுள் ஒரு படம் காசி. மலையாளத்தில்  1999ஆம் ஆண்டு வெளியான வசந்தியும் லக்ஷமியும் பின்னே ஞானும் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்ட படம்தான் காசி. கண் பார்வையற்ற கலைஞரான காசி, தன் குடும்பத்திற்காகவும் தனது பார்வை திரும்ப பெறுவதற்காகவும போராடும் கதையம்சத்தை கொண்டிருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. இப்படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும், இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.



கடவுள் பாதி, மிருகம் பாதியாக ஆளவந்தான்:


சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், கமல் ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்க ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியிருந்த படம் ஆளவந்தான். சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியிருந்த இப்படம், அப்போதைய சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப் போவாததால், தோல்வியையே சந்தித்தது. நடிகர் கமல் ஹாசன் 1984 ஆம் ஆண்டில் எழுதியிருந்த தயம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருந்த படம் இது. “கடவுள் பாதி மிருகம் பாதி” என வரும் பாடலில் அக்ரஸிவ் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல்.இன்றைய சினிமா ரசிகர்கள்,  கொஞ்சம் கொஞ்சமாக இப்படத்தின் பெருமையை  புரிந்து கொண்டனர்.


விஜய், சூர்யா, கமல் ஹாசன், விஜயகாந்த் மற்றும விக்ரம் என அனைத்து முன்னனி ஹீரோக்களின் நடிப்பில் உருவாகியிருந்த அனைத்து படங்களும் ஒரே நாளில் வெளியாகி இன்றளவும ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது, சாதனையாகேவ கருதப்படுகிறது. இந்த படங்கள் அனைத்தும் வெளியாகி இன்றுடன்  21 வருடங்கள் ஆகிறாதாம்