திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பின்னரே அப்படம் ஓடிடியில் வெளியாக வேண்டும். 8 வாரங்களுக்கு முன்பு வெளியாகும் படங்களை வெளியிடமாட்டோம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தற்போதைய நிலைப்படி ஒரு படம் திரையரங்கில் வெளியான 4 ஆவது வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஒரு சில படங்கள் திரையரங்கில் நல்ல வெற்றிபெறும் நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் கொஞ்சம் நீடிக்கப்படும் . 4 வாரத்தில் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் ஒரு படத்தை 4 வாரத்திற்கு மேல் படங்களை திரையரங்கில் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் 8 வாரங்களுக்குப் பின்பே படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானால் மட்டுமே அந்த படத்தை திரையரங்குகள் வெளியிடுவோம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து, பேசிவந்தனர். இதனை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறிக்கை
இந்த அறிக்கையில் "தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து, தமிழ்த் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென்றால், அந்தந்த திரைப்படங்களை 8-வாரங்களுக்கு OTT-வெளியிட மாட்டோம் மாட்டோம் என்று தயாரிப்பாளர்களை நிர்பந்தம் செய்து கடிதம் வாங்கி வருவதை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். மேற்படி விஷயம் குறித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றினைந்து வருகிற 10.05.2026 அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தவுள்ளார்கள். அக்கூட்டத்தில் நான்கு மாநில தயாரிப்பாளர்களும் சேர்ந்து, குறிப்பிட்ட தேதியை தீர்மானித்து, அந்த தேதியிலிருந்து, நான்கு மாநிலங்களிலும் எந்த திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவினை எடுக்கவுள்ளார்கள். அந்த முடிவுக்கு பொதுக்குழு ஆதரவு தெரிவித்து ஏகமனதாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், சங்கத்திற்கு தெரியாமல் OTT சம்பந்தமாக கடிதம் அளித்தார்கள் என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தமிழ்த் திரையுலகம் தொழில் ஒத்துழைப்பு வழங்காது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது"
