உத்தரப்பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசியதால் நடந்த வாக்குவாதத்தில் 3 நண்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஆரம்ப காலங்களில் ஒரு சாக்லேட்டும், வாழ்த்துகளோடும் நிறைவு பெறும். பிற்காலத்தில் கேக் வெட்டுவது, விருந்து வைப்பது போன்று ஆடம்பரமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. பிறந்தநாள் அன்று மாலை மரியாதை செய்வது, போஸ்டர், பேனர் வைப்பது, முட்டை, மிளகாய்தூள், தோசை மாவு போன்றவற்றால் அபிஷேகம் செய்வது, மது விருந்து வைப்பது என இவைகளெல்லாம் காலத்தின் கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தவறானவை என்பது காலம் தான் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உணர்த்தும். அப்படியான ஒரு நிகழ்வு தான் உத்தரப் பிரதேசத்தின் புலந்தஷார் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 

Continues below advertisement

அங்குள்ள குர்ஜா நகர் பகுதியில் உள்ள நேருபூர் சுங்கி சுபாஷ் சாலையில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. ஜித்து என்ற இளைஞரின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடும் பொருட்டு நண்பர்கள் அங்கு கூடியிருந்தனர். வழக்கம்போல மகிழ்ச்சியாகவே அந்த நிகழ்ச்சி தொடங்கியது. விழாவில் கேக் வெட்டப்பட்டு முதலில் நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் முகத்தில் மாறி மாறி பூசியுள்ளனர். 

அதில் சில நண்பர்கள் வேடிக்கையாக ஜித்துவின் முகத்தில் கேக் பூசத் தொடங்கியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜித்து தனது நண்பர்களை கண்டித்துள்ளார். இது அவர்களிடையே வாக்குவாதமாக மாறியது. இதனால் மேலும் கோபமடைந்த நண்பர்களில் சிலர் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் துப்பாக்கிச் சத்தம் கேட்டு சிதறி ஓடினர். ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில், மனிஷ் சைனி, ஆகாஷ் சைனி மற்றும் அமர்தீப் ஆகிய மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீசார் அப்பகுதியை தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். கேக் பூசியது தொடர்பான தகராறில் இந்தக் கொலைகள் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும், இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.