R S Shivaji: பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ், சிவாஜி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் தமிழ் சினிமா ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



காலமானார் ஆர்.எஸ்.சிவாஜி:


அபூர்வ சகோதரர்கள், கார்கி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ், சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. 80-களின் பிரபல திரைப்படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த ஆர்.எஸ்.சிவாஜி, “தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார். இறுதியாக இவர் சென்ற ஆண்டு சாய் பல்லவியின் அப்பாவாக நடித்த 'கார்கி' படம்  மூலம் பாராட்டுகளைக் குவித்தது. 1981ஆம் ஆண்டு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமான ஆர்.எஸ். சிவாஜி, தன் திரை வாழ்க்கையின் தொடக்க காலத்தில் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து கவனமீர்த்து வந்தார்.


மீண்டும் ஒரு கோகிலா, விக்ரம், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், குணா, கலைஞன் , அன்பே சிவன் உள்ளிட்ட பல கமல்ஹாசன் படங்களில்  காமெடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ள ஆர்.எஸ்.சிவாஜி அவருக்கு உற்ற நண்பர்களுள் ஒருவராகவும் வலம் வந்துள்ளார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளது திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.சிவாஜியின் இறுதிச் சடங்குகள் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது என்று தெரிகிறது. அவரது மறைவுக்கு  திரைத்துறையினரும் தமிழ் சினிமா ரசிகர்களும் ஆர்.எஸ். சிவாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இரங்கல்:




  • கமல்ஹாசன்




இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், "எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.








  • நெல்சன் திலீப்குமார்




"கோலமாவு கோகிலா படத்தில் பணியாற்றியபோது சிவாஜியுடைய நேர்மையையும், அர்ப்பணிப்பையும் நினைவு கூர்கிறேன்" என்று இயக்குநர் நெல்சன் தீலீப்குமார் இரங்கலை தெரிவித்திருந்தார்.