நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.


கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் பெரிதும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் சினிமாவில் தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுக்கு நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனால் அவர் பழையபடி நடிப்பதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.


இந்த நிலையில், நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது குறித்து தனியார் சேனலுக்கு நடிகர் வடிவேலு அளித்த பேட்டியில், “நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன். இரண்டு படங்கள் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என்று கூறினார்.




முன்னதாக, இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரம்மாண்டவ வெற்றி படங்களை இயக்கிய ஷங்கர் தயாரித்திருந்தார். மேலும், ஏற்கனவே உச்சத்தில் இருந்த வடிவேலுவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து கதாநாயகனாக இந்திரலோகத்தில் நா. அழகப்பன், எலி என்று ஏராளமான படங்களில் நடித்தார்.


கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியுள்ள வடிவேலுவின் நடிப்பில் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கரே தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாகி வந்தது. ஆனால், வடிவேலுவிற்கும் தயாரிப்பாளர் தரப்பிற்கும் இடையே போட்டி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், நடிகர் வடிவேலு படத்தில் நடிக்க ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சாட்டியது.




இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக இயக்குனர் ஷங்கர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். ஷங்கர் தரப்பில் இருந்தும், வடிவேலு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.