பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின்“ தில் ஹே கிரே” (Dil Hai Gray) தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 12ஆம் தேதி world Premierஆக இப்படம் திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆகிறது.


தில் ஹே கிரே


உத்தரப் பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் வினித்குமார் சிங், அக்‌ஷய் ஓபராய், ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் நடித்துள்ளனர். எம்.ரமேஷ் தயாரித்திருக்கிறார். 


கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல வாழும் இன்றைய சமூக வலைதள உலகத்தில், அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆவது பற்றி இயக்குநர் சுசி கணேசன் பேசியதாவது: “இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதிலும் முதல் காட்சி, டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுவது, உலக மார்க்கெட்டின் பார்வையை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது“ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


பிரத்யேக காட்சியில் பங்கேற்பதற்காக சுசி கணேசன், இணை தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன், நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் கனடா செல்கிறார்கள். Nfdcயின் “ இந்தியன் பெவிலியன்“ தொடக்க விழாவிலும் கலந்துகொள்கிறார்கள்.  இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் “தில் ஹே கிரே”, இத்திரைப்படவிழாவில் வியாபார ரீதியாகவும், கலை நயம் ரீதியாகவும் அழுத்தமான இடத்தைப் பிடிக்குமென எதிர்பாக்கப்படுகிறது.


தமிழ் சினிமா டூ பாலிவுட் பயணம்


பத்திரிகை துறையில் தொடங்கி இயக்குநர் மணிரத்னத்தின்  பாம்பே, தில் சே உள்ளிட்ட படங்களின் வழியாக உதவி இயக்குநராக திரைத்துறையில் நுழைந்தவர் சுசி கணேசன்.


பிரசன்னா, கனிகா நடித்த ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சுசி கணேசன், தொடர்ந்து பிரசாந்த் - சினேகா நடித்த ‘விரும்புகிறேன்’ , ஜீவன் - சோனியா அகர்வால் நடித்த ‘திருட்டுப்பயலே’ ஆகிய படங்களின் மூலம் கவனமீர்த்தார். 


இவரது இயக்கத்தில் விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான கந்தசாமி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


தமிழில் இறுதியாக 2017ஆம் ஆண்டு பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் நடித்த திருட்டுப் பயலே 2 படத்தினை சுசி கணேசன் இயக்கியிருந்தார். மேலும் முன்னதாக சுசி கணேசன் மீது எழுத்தாளர் லீனா மணிமேகலை மீ டூ குற்றச்சாட்டுகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: நேரில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன ?