தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை சூர்யாவின் படக்குழு வழங்கியுள்ளது. அதாவது, சூர்யா 42 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் நடிக்க 25 வயது முதல் 55 வயது வரையிலான நடிகர்களை படக்குழு தேடி வருகிறது.




நன்றான உடல் கட்டமைப்புடன் கூடிய தாடி, மீசையுடன் நீண்ட முடி கொண்ட நபர்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களை பகிரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நடிகர்கள் resumesivateam@aol.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில், சூர்யா 42 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் 60 % முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது; தற்போது இந்த படத்தின் ஹிந்தி உரிமை ரூ.100 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. மேலும், 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுவதால் இப்படத்தில் நடிகர் சூர்யா அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் தொடர்ந்து எடுக்க படக்குழு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் சூர்யா விலகியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 


இதைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைவார் என்றும் சூர்யாவின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் சூர்யா இணைந்து நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தேசிய விருது பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.‌ அதில் அக்ஷய்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி வெர்சனில் சூர்யா சிறப்பு தோற்றமும் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நடிகர் சூர்யா முன்பு போல் இல்லாமல் கதைத் தேர்வில் மிகவும் கவனத்துடன் செயல்படுவதால் அவரது ஒவ்வொரு படத்தின் மீதும் அவரது ரசிகர்கள் தொடங்கி, சினிமா ரசிகர்கள் மீதும், தனி ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத அவரது 42வது திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்த நினைக்கும் புதுமுக நடிகர்கள் மேற்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு தங்களது சுயவிபரங்களை அனுப்பி சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.