சுப்ரமணியபுரம்


கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக் படங்களில் ஒன்றாக உருவெடுத்த திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, ஸ்வாதி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். 


பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தனது ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ திரைப்படத்தை எடுக்க மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக தனக்கு சுப்ரமணியபுரம் படம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.


மீண்டும் வெளியாகும் சுப்ரமணியபுரம்


இந்நிலையில், 15 ஆண்டுகள் கழித்தும் சுப்ரமணியபுரம் படத்திற்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பைக் கண்டு இந்தப் படத்தை  மறுவெளீயிடு செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு. வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது படம். இந்தத் தகவலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினர் முன்னதாக பகிர்ந்திருந்தனர்.  இந்நிலையில், சுப்ரமணியம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், படக்குழு அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளது.


புதிய ட்ரெய்லர்





படத்தையே ரீரிலிஸ் செய்யப் போகிறார்கள். அதற்கு ட்ரெய்லர் இல்லாமல் எப்படி? அதனால் புதிதாக ட்ரெய்லர் ஒன்றையும் யூட்யூபில் வெளியிட்டுள்ளது படக்குழு. 15 ஆண்டுகள் கழித்தும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. படத்தில் மிகப் புகழ்பெற்ற தீம் மியூசிக்கான சுபரமணியபுரம் டைட்டில் மியூசிக் இந்த ட்ரெய்லர் நெடுகிலும் இடம்பெற்றிருக்கிறது.



 


மகிழ்ச்சி தெரிவித்த சசிகுமார்






இந்நிலையில், சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்ரமணியபுரம் படம் குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். “நேற்று நடந்ததுபோல்  இருக்கிறது, ஆனால் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை அங்கீகரிக்க மட்டுமில்லை. அதைக் கொண்டாடவும் செய்திருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியான நாளில் நான் உங்களுடன் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறேன்“ என்று தனது ரசிகர்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்தான கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.