கடந்த சில தினங்களாக அதிமுக முன்னாள் பொறுப்பாளர் ஏ.வி. ராஜூ ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகை திரிஷா, நடிகர் கருணாஸ், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், இயக்குநர் சேரன் ஆகியோர் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 


இந்நிலையில், நடிகர் சங்கத் தலைவரும் தமிழ்நாட்டில் உள்ள மூத்த நடிகர்களில் ஒருவராக உள்ளவருமான நாசர் இந்த விவாகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், “தற்போது பொது வலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ். குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ,ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும்  பொய்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.
 கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும், கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும், இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும், சட்ட ரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும். பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார். 




இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ”ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த  முட்டாள் ஒருவர் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். நான் சம்பந்தப்பட்ட உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் நிச்சயமாக பெயர்களைக் குறிப்பிட மாட்டேன்,


 

ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல, திரையுலகில் பரஸ்பர சக கலைஞர்களாகவும் இருக்கிறோம். உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த காரியத்திற்குப் பிறகு, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

 

 பூமியில் இருக்கும் இத்தகைய தீய சக்திக்கு பதிலடி கொடுக்க ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்தது முற்றிலும் குறிப்பிடத் தகுதியற்றது. உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இதற்கான தண்டனை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். 

 

மீண்டும் ஒருமுறை நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிட விரும்பவில்லை. ஒரு மனிதனாகவே இதை சொல்கிறேன். நிச்சயமாக, இது பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” என மிகக் காட்டமான பதிவை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.