நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு.  இதன் படப்பிடிப்பு கடந்த ஜூலை 9ஆம் தேதி  நிறைவடைந்தது. அப்போது, படத்தின் கதாநாயகன் சிம்பு படக்குழுவினர் 300 பேருக்கு வாட்ச் பரிசாக கொடுத்து அசத்தினார். வாட்ச் வழங்கியதற்கு சிம்புவுக்கும், தனது மாநாடு குழுவுக்கும் நன்றி கூறிய இயக்குநர் வெங்கட் பிரபு, விரைவில் அப்துல் காலிக்கை பார்ப்பீர்கள் என்று ட்வீட் செய்தார். இதனைத்தொடர்ந்து, படத்தின் மீதி பணிகள் நடைபெற்று வந்தது.


இந்த நிலையில், ‘மாநாடு’  திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று நடிகர் சிம்பு நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநாடு டிரைலர் ஆன் தி வே சூன் எனப் பதிவிட்டிருந்தார். அத்துடன், டிரைலர் தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். சிம்புவின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திகைத்து இருந்தனர்.


இந்த நிலையில்,  ‘மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று டிரைலர் வெளியாகிறது. 


 






அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியானதுமே, சிம்பு நேரத்திற்கு வந்து நடித்து கொடுக்கமாட்டார் என்று சொல்லப்பட்டது. அதுபோலவே, சிம்புவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்களும் சிம்பு ஏன் இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்காமல், காலம் தாழ்த்துகிறார் என்று புலம்பினார்கள். சிம்பு நடிப்பார் என்று நம்பிக்கையோடு இருந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து, ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாக நொந்துபோய் அறிவித்தார். அதன்பிறகு, உடம்பை குறைத்து வந்த சிம்பு, ‘மாநாடு’ படம் மீண்டும் தொடக்கம் என அறிவிப்பால், மீண்டும் சூடிபிடிக்க தொடங்கியது மாநாடு படம் குறித்த பேச்சுக்கள். யாரும் எதிர்பாராத வகையில், சரியான நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டு ‘மாநாடு’ படத்தை நடித்து கொடுத்து முடித்தார். 


மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கடந்த 11ஆம் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மாநாடு, அண்ணாத்த, தீபாவளி ரேஸில் குதிக்க உள்ளது ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.