தமிழ் சினிமாவில் 90-களில் மிகவும் பிரபலமான திறமைவாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. அவரைப் போலவே தோன்றம் கொண்ட அவரின் தங்கை நிஷாந்தி என்ற சாந்தி பிரியாவும்  பல திரைப்படங்களில் நடித்துள்ளர். "எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்தில் நடிகர் ராமராஜன் ஜோடியாக நடித்த நிஷாந்தி "செண்பகமே செண்பகமே" பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இன்றும் அந்த பாடல் 90'ஸ் கிட்ஸ்களின் பேவரட் பாடலாக நிச்சயம் பிளே லிஸ்டில் இடம்பெற்று இருக்கும். இன்றும் அவரை செண்பகம் என்ற பெயரிலேயே ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளனர். 



 


தமிழில் விஜயகாந்த், பிரபு என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சாந்தி பிரியா அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சாந்தி பிரியா, அக்காவுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தின் மீது தனது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டவர் மீண்டும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சாந்தி பிரியா தான் திரும்பவும் இண்டஸ்ட்ரி உள்ளே வர விரும்புவது குறித்து பேசியிருந்தார். அந்த சமயத்தில் நடிகர் அக்ஷய் குமார் தான் பல பேர் முன்னிலையில் எப்படி தலைகுனிய செய்தார் என்பதை பற்றியும் மனம் திறந்தார். 



நடிகர் அக்‌ஷய் குமாரின் முதல் ஆன்-ஸ்கிரீன் பார்ட்னரான சாந்தி பிரியா தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து கூறுகையில் 1994ம் ஆண்டு வெளியான "இக்கே பே இக்கா" படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அங்கு சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் அக்ஷய் குமார் எனது கருமையான முழங்கால்களை பார்த்து கேலி செய்தார். "ஷாந்தி, உனக்கு முழங்காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டதா?" என கேட்டார். அப்படி எதுவும் இல்லையே என பார்த்துக்கொண்டு இருக்கும் போது பிறகு ஏன் உன் முழங்கால்கள் இவ்வளவு கருப்பாக இருக்கிறது என சொன்னதும் அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்தனர் என கூறி அக்ஷய் தன்னை கேலி செய்த விஷயத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்