சென்னை எக்ஸ்பிரஸ்


ஷாருக் கான் , தீபிகா படுகோன் நடித்து வெளியான சென்னை எக்ஸிரஸ் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளன. ரோஜித் ஷெட்டி இந்தப் படத்தை  இயக்கிநார்.

எல்லா நேரமும் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு. அரைகுறையாக இந்திப் பேசிக்கொண்டு. இட்லி வடை சாம்பார் தவிர மற்ற எந்த உணவையும் சாப்பிடாதவர்களாக மட்டுமே பாலிவுட் சினிமா தமிழர்களை பாடங்களில் அதிகம் காட்டி இருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படமும் அதையே தான் செய்தது. ஆனால் அது நம்மை எந்த வகையிலும் கோபப்படுத்தவில்லை. 


பாலிவுட் படங்கள் பார்த்து வளர்ந்த ஆணும்.. தமிழ் படங்கள் பார்த்து வளர்ந்த பெண்ணும்


பாலிவுட் சினிமாக்களைப் பார்த்து வளர்ந்த ஒரு ஆணும் தமிழ்ப் படங்களை பார்த்து வளர்ந்த ஒரு பெண்ணும் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும் . அப்படியான ஒரு கற்பனையே சென்னை எக்ஸ்பிரஸ்.  ஹீரோ என்னவோ அதேதான். கூப்பிட்டு கூப்பிட்டு காதுகளுக்கு சலித்துப் போன ராஹுலாக தான் இந்தப் படத்தில் ஷாருக்கான் நடித்திருப்பார். ஓடும் ரயிலில் பெண்களுக்கு கை கொடுத்து உதவுவது. பெயர் கேட்டால், பத்து பக்கங்களுக்கு வசனம் பேசுவது. ஓவர் கான்பிடன்சில் உளறுவது. ஆனால் இந்த முறை கதாநாயகி ஒரு தமிழ் பெண். எந்த வகையிலும் ஷாருக்கானின் வழக்கான ஹீரோயிசத்தைக் கண்டு ஈர்க்கப்படாதவர். தன்னை கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கும் தன்னுடைய அப்பாவின் அடியாட்களிடம் இருந்து அவள் தப்பிக்க வேண்டும். அதுவே அவளது ஒரே நோக்கம். அப்படி எஸ்கேப் ஆகும் நேரத்தில் வந்த இடைஞ்சலாகதான் அவர் ஷாருக்கானைப் பார்க்கிறார்.


செண்டிமெண்ட்


எது பேசினாலும் பல்ப் வாங்கும் ஷாருக் கான் ஒரு கட்டத்திற்கு மேல் மீனம்மாவிடம் சரண்டர் ஆகிறார். எந்த நேரமும் மார்பை நிமிர்த்தி வீரனாக தன்னை காட்டிக்கொள்ளும் ஆண்களை விட உணர்ச்சிவசமான ஆண்களையே மீனம்மா விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்கிறார். எந்த வித வருத்தமோ இல்லாமல் தன்னுடைய கடமைக்காக தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க சென்றுகொண்டிருக்கும் ஷாருக்கான் மீனம்மா தன்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு சென்டிமெண்டாக மாறுகிறார். தமிழ் படங்களில் காலம் காலமாக படங்களில் இடம்பெறும் பெண்களை தூக்கிக்கொண்டு படியேறும் காட்சியில் அவரும் நடிக்க வேண்டியதாக போய்விட்டது.


ரத்தம் சிந்த சிந்த வில்லன்களிடம் அடி வாங்கி கடைசியில் திருப்பி அடித்தார் ஷாருக்கான். குத்தாட்டம் போட்டார். அரைகுறையாக தமிழும் கற்றுக்கொண்டார் இப்படி பல தியாகங்கள் செய்து ஒரு வழியாக மீனம்மாவின் மனதை கவர்ந்து பாலிவுட் ஹீரோவாக இருந்த ஷாருக்கான் கோலிவுட் ஹீரோவாக மாறினார்.