சின்னத்திரை நடிகை ஷபானாவும், கணவர் ஆர்யனும் பிரியப்போகிறார்கள் என்று பரவிய வதந்திக்கு ஒரு இன்ஸ்டா போஸ்ட்டில் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் ஷபானா.


வெள்ளித்திரையின் நாயகிகள் மட்டுமே கிசுகிசுக்களில் சிக்கிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் அவர்களுக்கு நிகரான மார்க்கெட்டும், மவுசும் சின்னத்திரை நடிகைகளுக்கும் இருக்கிறது. மவுசுக்கேத்த அளவிற்கு கிசுகிசுவுக்கும் பஞ்சமில்லை.


செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஷபானா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக முதலில் நடித்தவர் கார்த்திக்ராஜ். இந்த ஜோடி மக்களின்  விருப்பமான ஜோடியாக இருந்தது. வழக்கம்போல், ஷபானா, கார்த்திக்ராஜ் ஜோடி காதலில் விழுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது புரளி கிளம்பியது. இதெல்லாம் தயாரிப்பு நிறுவனமே பரபரப்புக்காகக் கிளப்புகிறதா? இல்லை உண்மையிலேயே நெருப்பில்லாமல் புகையுமா ரகமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் சின்னத்திரையில் ஜோடி கட்டும் ஜோடிகள் சமூக வலைதளங்களில் ரியல் ஜோடியாக்கி கிசுகிசுக்கப்படுகின்றனர்.அப்படி வந்த கார்த்திக்குடனான காதலை ஷபானா மறுத்தார். அந்த வதந்தி முடிவுக்கு வந்ததும், பாகியலெட்சுமி சீரியல் நடிகர் செழியனுக்கும் ஷபானாவுக்கும் காதல் எனக் கொளுத்திப் போடப்பட்டது.


ஆனால், ஆச்சர்யம் என்னென்னா இதைக் கேட்டு ஷபானா குதிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ரைட்டு கன்ஃபர்ம் தான் போல என நெட்டிசன்களும் சளைக்காமல் பேசி வர இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். சின்னத்திரை பிரபலங்களான சித்து-ஸ்ரேயா, பிரவீன் தேவசகாயம்-ஐஸ்வர்யா வரிசையில் இணைந்த ஷபானா-ஆர்யன் ஜோடி திருமணம் முடித்த கையோடு ரேஷ்மா – மதன்பாண்டியன் திருமணத்துக்கு அட்டன்டன்ஸ் போட்டனர்.




இந்நிலையில் மணமான ஒரு மாதத்துக்குள்ளே இவர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதாக சலசலக்கப்பட்டது. ஷபானாவை ஏற்றுக்கொள்ளாத ஆர்யனின் வீட்டார்,  ஷபானாவை மிரட்டுவதாகவும், இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாகவும் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.


ஷபானா முஸ்லிம் பெண், ஆர்யன் இந்துப் பையன். இதுதான் இருவீட்டாரின் பிரச்சினையாம். இந்தப் பிரச்சினையால் பிரியப் போகிறார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் தான் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது, சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்று பதிவு செய்திருந்தார்.







இதனால் பிரச்சனை இருப்பது உறுதி என எல்லோரும் கருதினர். உச்சுக் கொட்டி ஆறுதல் வார்த்தைகளைக் கொட்டினர். ஆனால் அந்தர்பல்டி அடித்த ஷபானா, கிறிஸ்துமஸ் வாழ்த்துடன் இருவரின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அது ஆல் இஸ் வெல் வகையறாவில் இருந்ததால் வதந்தி பேசியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.