திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரபல சீரியல் தம்பதியினர் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் பிரிந்துள்ளதாக வெளியான செய்தியில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ரியல் ஜோடியான ’ரீல் ஜோடி’


பொதுவாக சினிமா, சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும் காதலித்து திருமணம் செய்வது என்பதும் தொடர்கதையாக நடைபெற்று வரும் சம்பவமாகும். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். 


இருவரும் திருமண செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள் எனப் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதனிடையே கடந்த சில நாட்களாகவே சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


ரசிகர்களை அதிர வைத்த பதிவு


இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்களை நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், ஃபாலோ செய்வதையும் தவிர்த்தனர். இதனால் ரசிகர்கள் இருவரது பதிவிலும் கேள்வி மேல் கேள்வி எழுப்ப சம்யுக்தா இதற்கு பதிலளித்திருந்தார். அதன்படி அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ’டியர் ஹேட்டர்ஸ்.. நீங்கள் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல்தான் என் வாழ்க்கை தொடங்க இருக்கிறது. நீங்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு எல்லாம் நடக்கும். அதனால் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள தேவையான வலுவை பெற்று கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 


விளக்கம் கொடுத்த விஷ்ணுகாந்த் 


இந்நிலையில் முதன்முறையாக இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாந்த் பதிலளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அவர், “மார்ச் 3ஆம் தேதி எங்களுக்கு திருமணம் நடந்தது. 10ஆம் தேதி நாங்கள் சென்னை வந்தோம். ஆனால் அடுத்த 15 நாள்கள் மட்டுமே என் வீட்டில் இருந்தார். நான் நல்லபடியாக இருக்க வேண்டுமென நினைத்து அவரது குடும்ப நிலையை சொல்லியதை எண்ணி கல்யாண செலவை நானே ஏற்றுக் கொண்டேன்.


நான் இவ்வளவு நாளாக பொறுமையாக இருந்த காரணம். இதெல்லாம் ஒரு பிரச்சினையா என நினைத்தது தான். என்னிடம், விட்டு விட்டு போய்விட்டார் என சொல்லப்பட்ட சம்யுக்தாவின் அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம். அவர் பேச்சைக் கேட்டு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. 


சம்யுக்தா என்னிடம் ”என்னையும் அம்மாவையும் விட்டுட்டு போன அப்பாவை கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டேன். வீட்டிற்குள் விட மாட்டேன்” என சொன்னார். பின்னர் சம்பிரதாய முறைக்கு கூப்பிட்டோம். ஆனால் அவர் வந்ததில் இருந்து எல்லாம் மாறிவிட்டது.  நான் சம்யுக்தாவிடம் பேச முயற்சி செய்ததை அவரது அப்பா தடுக்கிறார். 


நான் சம்யுக்தாவின் அப்பாவிடம் கேள்வி எழுப்பினேன். எங்கள் இருவருக்கும் பெர்சனல் என்பதே இல்லை. அப்பாவின் வீடு அருகில் உள்ள நிலையில், காலை ஒரு முறை, மாலையில் ஒருமுறை என வருவார். அதிலும் பிரச்சினை நடந்தது. அதன்பிறகு என்னை விட அவரது தோழி தான் முக்கியம் என சொல்ல பிரச்சினை வெடித்தது. இவையெல்லாம் கல்யாணம் முடிந்து 15 நாட்களுக்குள் நடந்தது. நான் பலமுறை சம்யுக்தாவிடம் பேச முயற்சி செய்த நிலையில் அவர் இடம் கொடுக்கவில்லை. 


நான் அவரை துன்புறுத்தவும் இல்லை. இணையத்தில் பலரும் தவறாக சித்தரிக்கிறார்கள்” என விஷ்ணுகாந்த் கூறியுள்ளார். இதற்கு சம்யுக்தா விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.