தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் வில்லனாக நடித்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன. 


குறிப்பாக சமந்தாவின் முதல் ஐட்டம் சாங்கான ஓ சொல்றியா பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக ஓ சொல்றியா பாடல் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக கூறி ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்குத் தொடுத்தது. ஓ சொல்றியா பாடலைப் போலவே  ‘ சாமி சாமி’ பாடலும், படத்தின் பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.    


 



ஓ சொல்றியா பாடல் குறித்து அல்லு அர்ஜூன் கூறும் போது, “சமந்தா காரு இந்த பாடலை செய்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான்  இந்த பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அதற்கு நன்றி. இதை செய்வது  சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது. அது எனக்கு  படப்பிடிப்பின் போதே தெரிந்தது. அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன் ’என்னை நம்பி இதை செய் ’  என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும் மரியாதையையும் வென்றுள்ளீர்கள்” என கூறினார். 


இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் செல்வராகவன் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப்பதிவில், “ புஷ்பா.. வாவ்! என்ன ஒரு எண்டர்டெய்னர். சுகுமாருக்கு பாராட்டுகள்.


படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தோட பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நான் அடிக்ட் ஆகிவிட்டேன். அல்லு அர்ஜூன்.. என்னா நடிப்பு.. என்னா பாடி லாங்குவேஜ்.. மைண்ட் ப்ளோயிங்.. படத்தில் இடம்பெற்றிருந்த சின்ன சின்ன நுணுக்கங்கள் மிகவும் பிடித்திருந்தது. ஹாட்ஸ் ஆப்” என்று பதிவிட்டுள்ளார். 


 










இந்தப்பதிவிற்கு ரிப்ளை செய்த அல்லு அர்ஜூன் மிகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.