கோவை போத்தனூர் - பாலக்காடு இரயில் பாதை வனப்பகுதி வழியாக செல்கிறது. மற்றும் பி என்ற இரண்டு ரயில் தடங்களில் தினந்தோறும் 70 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், வனப்பகுதிக்குள் சுமார் 2 கி.மீ தூரம் ‘ஏ’ லைனும், 3 கி.மீ தூரம் ‘பி’ லைனும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இரவு நேரங்களில் இரயில்வே பாதையை கடக்கும் காட்டு யானைகள், அவ்வப்போது இரயிலில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த இரயில் பாதையில் மட்டும் இதுவரை 28 காட்டு யானைகள் இரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் கர்ப்பிணி யானை உள்ளிட்ட 3 யானைகள் இரயில் மோதி உயிரிழந்தன. இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறை மற்றும் இரயில்வே துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு எல்லையை ஒட்டிய கேரள பகுதியான வாளையாரில் இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளத்தையொட்டி அதிக சத்தம் எழுப்ப கூடிய கருவியை இரயில்வே துறையினர் பொருத்தியுள்ளனர். சோதனை முயற்சியாக அதி நவீன தொழில்நுட்பத்துடன் சூரிய ஒளியுடன் செயல்படக் கூடிய ஒசை எழுப்பும் கருவிகள் அடிக்கடி காட்டு யானைகள் வரக் கூடிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ரயில்வே துறையினர் வாளையார் ரயில் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கருவியானது இரவு 7 முதல் காலை 6.30 மணி வரை செயல்படும். அப்போது இந்த கருவியில் இருந்து தேனீக்கள் சத்தம் மற்றும் புலி உருமல் சப்தம் கேட்டு கொண்டே இருக்கும். புலி உறுமல் மற்றும் தேனீக்கள் சத்தங்களுக்கு காட்டு யானைகளை பயப்படும் என்பதால், சத்தம் கேட்டு காட்டு யானைகள் ரயில் பாதையில் நுழையாமல் வேறு பாதையில் செல்லும் என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.




இதேபோல இரயில் பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கூடுதல் பணியாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், இரயில்களின் வேகத்தை கண்டறிய ’ஸ்பீடு கன்’ பொருத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில், “கோவை - பாலக்காடு இரயில் பாதையில் இரயில் மோதி தொடர்ந்து யானைகள் உயிரிழக்கும் துயரம் நடந்து வருகிறது. யானைகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையும், இரயில்வே துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக யானைகள் இரயில் பாதைக்கு வராமல் தடுக்கும் முயற்சியாக, வாளையார் அருகே புலி, தேனீ ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. யானைகள் உயிரிழப்பதை தடுக்க இது மட்டும் தீர்வல்ல.




தேனீ, புலி சத்தம் கேட்டால் யானைகள் பயப்படும். யானைகள் புத்திசாலிகள். அதனால் தொடர்ந்து புலி, தேனீ இல்லாமல் சத்தம் மட்டும் வந்தால் யானைகளுக்கு பழகிவிடும். யானைகளுக்கு பயம் விட்டு போகும். அது மட்டும் இல்லாமல் இரவு முழுவதும் வரும் தொடர் சத்தம் யானைகளின் இயல்பை பாதிக்கும். இச்சத்தத்தால் பாதை மாறி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. அதனால் யானைகள் வரும் போது மட்டும், இதனை செயல்படுத்தி பார்க்கலாம். யானைகளின் வாழ்விடமான காட்டிற்கு யானைகள் செல்லக்கூடாது என நிர்பந்திக்க முடியாது. யானைகள் இரயில் தண்டவாளத்தை கடக்க கீழ் மட்ட பாதை, மேல் மட்ட பாதை, சம மட்ட பாதை ஆகியவை அமைக்க வேண்டும். மற்ற இடங்களில் கடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.