தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான சட்டம் என் கையில் என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். முன்னதாக பல படங்களில் நெகட்டிவ் ஷேட்களில் நடித்து பாராட்டை பெற்றவர். கதாநாயகானாக நடித்தால் வில்லனாக நடிக்க கூடாது என்ற காலக்கட்டத்தில் இருந்த தமிழ் சினிமாவில், ஒரே நேரத்தில் இரண்டிலும் கலக்கியவர் சத்யராஜ். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் செய்யும் நியாயம்தான் அவரை இன்றளவும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட வைத்துவிட்டது. சிம்மாசனம் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது, பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தை சத்தியராஜை தவிர வேறு யார் செய்திருந்தாலும் , இந்த அளவுக்கு அழுத்தமாக இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தென்னிந்திய சினிமாவை கலக்கிய சத்யராஜை கட்டப்பா கதாபாத்திரம் இந்திய அளவில் பிரபலமடைய செய்தது. அக்டோபர் 3 ஆம் தேதியான நேற்று சத்யராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நண்பர்கள் , ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.குறிப்பாக சிபி ராஜின் மகன்களும், சத்யராஜின் பேரன்களுமான தீரன் மற்றும் சமரன் ஆகியோர் தங்களது தாத்தாவிற்கு ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளனர்.


 






அதில் பாகுபலி படத்தின் கட்டப்பா கதாபாத்திரத்தை தத்ரூபமாக வரைந்து தங்களது தாத்தாவிற்கு “ஹாப்பி பர்த்டே தாத்தா “ என வாழ்த்து மடல் ஒன்றையும் எழுதியுள்ளனர். இதனை சிபி ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  சத்தியராஜ் தற்போது சமூக வலைத்தளங்களில் இணையவில்லை. அவர் குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை மகள் திவ்யாவும் , மகன் சிபி ராஜும்தான் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக சத்யராஜ் , மணிவண்ணன் நினைவுநாளில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனை சிபிராஜ்தான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதே போல அவ்வபோது சத்யராஜ் குடும்பத்துடன் செலவிடும் தருணங்களை சிபிராஜ் மற்றும் திவ்யா ஆகியோர் பகிர்ந்து வருகின்றனர். 






 


சத்யராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். கோவை தமிழில் இவர் பேசும் வசனங்களை ரசிக்க மட்டுமே 80 களில் இருந்து இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனக்கு கொடுக்கப்பட்ட வசனங்களில் கோவை குசும்பை புகுத்தி பேசுவாராம் சத்யராஜ் . இவர் நடிப்பில் “தகடு ! தகடு”, “என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டிங்கிறியே”, “சோழ பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” உள்ளிட்ட பல வசனங்கள் இன்றளவும் மீஸ்களை நிறைத்து வருகின்றனர். துணிச்சல் மிக்க கருத்துக்களாலும் அசர வைக்கும் நடிப்பாலும் மக்கள் உள்ளங்களை கவர்ந்துவரும் சத்யராஜ் மேலும் பல அகவைகளை கடக்க வாழ்த்துக்கள்!