இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கொடுமைகளை ஆங்கில ஏகாதிபத்திய அரசால் அனுபவித்தவர் வீரத்துறவி சுப்ரமணிய சிவா, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் கடந்த 1884-ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 1906 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஸ்ரீநாகூர்கான் எழுச்சிமிகு உரையைக் கேட்டு, தன்னை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். 1908இல் கோரல்மில் தொழிலாளர்களுக்காக வ.உ.சி நடத்தி போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அப்போராட்டத்தில் வெற்றிப்பெற்றார். இப்போராட்டத்தின் போது இவர் தொழிலாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை, ஆங்கிலேயரை அச்சம் கொள்ள செய்தது. இதையடுத்து, நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் 4 மாதம் சிறையில் இருந்தார். இவ்வழக்கிலிருநந்து வெளிய வந்து, அவர் தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்றதால் மீண்டும், 1921 மற்றும் 1922-ஆகிய ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர், அலிபுரம் சிறையில் இருந்தபோது, தருமபுரியைச் சேர்ந்த தியாகிகளின் நட்பு கிடைத்தது. தொடர்ந்து தொழுநோயால் பாதிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையாகி, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.



 

தனது நண்பர்கள் உதவியுடன் பாப்பாரப்பட்டி சண்முக முதலியாரிடம் 6 ஏக்கர் 21 சென்ட் நிலத்தை வாங்கி, அந்த நிலத்திற்கு பாரதபுரம் என பெயர் வைத்தார். இங்கு தங்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், அந்த இடத்தில் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி ஒற்றுமையுடன் இருக்க, பாரதமாதா ஆலயம் எழுப்ப திட்டமிட்டார். தொடர்ந்து கையில் தேசிய கொடியுடன், பாரத மாத சிலையினை அவரை வடிவமைத்தார். இந்த ஆலயம், இந்திய திருநாட்டிற்கே உதாரணமாக இருக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.

 



 

தொடர்ந்து அடுத்த வருகின்ற தலைமுறைகள் விடுதலை போராட்ட வீரர்களை தெரிந்து கொள்ளும் வகையில், தியாகிகளின் சிலை அமைக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக, 1923 ஜூன் 22-ஆம் தேதி சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து, அடிக்கல் நாட்டினார். தனது லட்சியக் கனவை நிறைவேற்ற அவர் தன்னை பாதித்த தொழுநோயையும் பொருள்படுத்தாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிதி திரட்டினார். இந்த நிலையில், தியாகி சுப்பிரமணிய சிவா, பாப்பாரப்பட்டி பாரத ஆசிரமத்தில் இருந்த போது கடந்த 1925-இல் ஜூலை 23-இல் தனது 41-ஆவது வயதில் மறைந்தார். அவரது உடல் பாரத புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 

அவரது மறைவிக்கு பின்னர், பாரதமாதா ஆலயக் கனவு நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மணிமண்டபத்தை கட்டினார். தொடர்ந்து சிவாவின் கனவை நனவாக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், நடைப்பயணம், அடையாள உண்ணாவிரதம் அவ்வப்போது மேற்கொண்டார். மேலும், இது தொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஆலயம் கட்டுவது தேச ஒற்றுமையை வளர்க்கும் எனவும், இது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த 2015 ஜூன் 19-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

 



 

இந்த உத்தரவைத் தொடர்ந்து குமரிஅனந்தனும், தருமபுரி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு, ஆலயம் எழுப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில், நூலகத்துடன் கூடி பாரதமாதா நினைவாலயம் கட்டியது. ஆனால் தியாகி சுப்பிரமணிய சிவா கனவு இன்னும் முழுமையடையாமல் இருந்த வருகிறது. சிவாவின் விருப்பபடி, ஆலயம் என பெயர் சூட்டாமல், நினைவாலயம் என பெயர் வைக்கப்பட்டது. இதனை இன்றைய தமிழக அரசு திருத்தம் செய்ய வேண்டும். இந்த ஆலயத்தில் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணிமண்டப வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை அமைத்தும், நூலகத்திற்கு கூடுதலாக புத்தகங்களை வழங்க வேண்டும். அப்பொழுது தான் தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவை நினைவாகும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.