புஷ்பா தி ரைஸ் பாகம் 1 படத்தில் நடிகை சமந்தா ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு ஆடி உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அந்தப் பாடலுக்கு அவர் நடனமாட ஒப்புக்கொண்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட்.


இந்நிலையில் சமந்தாவுக்கு அந்தப் படத்தில் ரூ.5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுபாஷ் கே. ஜா ஒரு பேட்டியில், “வெறும் 3 நிமிட பாடலுக்கு சமந்தாவுக்கு கிட்டத்தட்ட ரூ.5 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் அந்தப் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொள்ளவே இல்லை. அப்புறம் அல்லு அர்ஜூன் தான் அவரை சமரசப்படுத்தினார். ஆரம்பத்தில் அந்த நடன அசைவு முடியாது , இது வேண்டாமே என்றெல்லாம் அவர் நிறைய கெடுபிடிகளை விதித்தார். இருந்தாலும் பின்னர் அவர் ஒப்புக் கொண்டார். ஆனால், நடனப் பயிற்சியை ஆரம்பித்த பின்னர் அவர் எந்த ஒரு நடன அசைவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் மிக அழகாக ஆடிக்கொடுத்தார். அது ஒரு டைம் பாம் போல் வேலை செய்துள்ளது” என்றார்.


முன்னதாக புஷ்பா வெற்றி விழா நிகழ்வில் சமந்தா குறித்து பேசிய அல்லு “சமந்தா காரு இந்த  பாடலை  செய்ததற்கு மிக்க நன்றி.  நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான்  இந்தப் பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அதற்கு நன்றி. இதை செய்வது  சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது. அது எனக்கு  படப்பிடிப்பின் போதே தெரிந்தது. அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன் ’என்னை நம்பி இதை செய்யுங்கள்’  என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும் மரியாதையையும் வென்றுள்ளீர்கள்” எனக் கூறியிருந்தார்.


சமந்தாவும் அதற்கு பதிலளித்து நான் உங்களை எப்போதும் நம்புவேன் அல்லு அர்ஜூன் என்று கூறியிருந்தார்.


ஓ சொல்றியா பாடலில் சமந்த குத்தாட்டம் பலரைக் கவர்ந்திருந்தாலும், ஆண்களை எல்லாம் இப்படி ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டும் பாடலில் நடித்துவிட்டாரே என்று அவரது ரசிகர்களுக்குக் கொஞ்சம் கவலைதான்.