தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் மயோசிட்டிஸ் எனும் நோய் பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி படப்பிடிப்பில் பிஸியாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' திரைப்படத்திலும் 'சிட்டடேல்' என வெப் சீரிஸுலும் நடித்து வருகிறார்.


மேலும் நடிகர் தேவ் மோகன் ஜோடியாக அவர் நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார் சமந்தா. இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


நட்பு காதலானது :


சிம்பு - த்ரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யா - சமந்தா ஜோடி முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் அவர்களின் ஜோடி மீண்டும் இணைந்தது. அதன் மூலம் ஏற்பட்ட நட்பு காதலாக மாற 2017ம் ஆண்டு நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. இருப்பினும் நான்கு ஆண்டுகளில் அவர்கள் இருவரும் பிரிய போவதாக சோசியல் மூலம் அறிவித்தனர். 


என்றுமே நட்பு தொடரும் :


அவர்களின் பிரியவை அறிவித்த சமயத்தில் நடிகை சமந்தா ஒரு பதிவு ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். "எங்களது நலவிரும்பிகள் அனைவருக்கும் நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால் இந்த முடிவை நாங்கள் இருவரும் இணைந்து நீண்ட ஆலோசனைக்கு பிறகே எடுத்துள்ளோம். நாங்கள் எங்கள் இருவரின் கேரியரை தனித்தனியே தொடர முடிவெடுத்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு என்றுமே அது போலவே இருக்கும். இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவளித்து நாங்கள் செல்ல வேண்டிய பாதையை பிரைவசியுடன் கடந்து செல்ல ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் நல விரும்பிகள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்து இருந்தார். 


டேட்டிங் குறித்து சமந்தா கருத்து:


சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன்  டேட்டிங் செய்து வருவதாகவும் சில காலமாக வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் ஒன்றாக சேர்ந்து லண்டன் சுற்றலா சென்றதாகவும் அங்கு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் என சோசியல் மீடியாவில் வைரலாக காட்டுத்தீ போல பரவியது. இருவரும் இது குறித்து வாய் திறந்து எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறார்கள்.


இது குறித்து நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி நடிகை சமந்தா ஒரு ஊடகத்திற்கு  பதிலளித்ததாக கூறப்படுகிறது. " யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அன்பின் மதிப்பு தெரியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீர் விட்டுவிடுவார்கள். குறைந்த பட்சம் அந்த பெண்ணுக்கு சந்தோஷமாவது இருக்க வேண்டும். அவர் தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொண்டு அந்த பெண்ணை காயப்படுத்தாமல் பார்த்துக்கொண்டால் எல்லோருக்கும் நல்லது" என சமந்தா பதிலளித்ததாக கூறப்படுகிறது.


சமந்தா கூறியாக கூறப்படும் இந்த அறிவிப்பை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகை சமந்தா. நான் இது போல கூறவே இல்லை என தனது ட்விட்டர் பக்கம் மூலம் "நான் இதை ஒருபோதும் சொல்லவில்லை! (sic)" பதிவிட்டுள்ளார்.