Thiru S.P. Muthuraman: ஏவிஎம் நிறுவனத்திற்கு கண்டிஷன் போட்டு கதை சொன்ன இயக்குனர்...எஸ்.பி முத்துராமன் யாரை சொல்கிறார்?


தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக விளங்கியவர் எஸ்.பி. முத்துராமன். முன்னணி நட்சத்திரங்கள் பலரையும்  இயற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -  எஸ்.பி. முத்துராமன் கூட்டணியில் 25 படங்கள் உருவாகியுள்ளன. இவர்களின் கூட்டணி என்றுமே ஒரு வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டாரை ஒரு கலைஞனாக வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகிப்பவர் எஸ்.பி. முத்துராமன். ஒரு நிகழ்ச்சியின் போது அவர் சில இயக்குனர்களை பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். 



வாய்ப்பை தட்டி பறித்தவர் :


எஸ்.பி. முத்துராமன் பேசுகையில் "ரஜினிகாந்த் திரைப்படங்களை தொடந்து நானே இயக்கி வருவதால் விநியோகஸ்தர்கள் வேறு ஒரு இயக்குனரை வைத்து படம் எடுக்க கூறியதால் ஏவிஎம் நிறுவனம் ஒரு புதிய இயக்குனரை அறிமுகப்படுத்தியது அவர் தான். ஆர். வி. உதயகுமார். அந்த திரைப்படம் தான் "எஜமான்". 


ஏவிஎம் நிறுவனத்திற்கே கண்டிஷன் போட்டவர்:


அடுத்தது இயக்குனர் பாக்யராஜ் பற்றி கூறுகையில் "கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் ஒருவராக செய்யும் திறமை படைத்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஏவிஎம் நிறுவனம் என்றுமே கதை கேட்காமல் படத்தின் பணிகளை துவங்காது. அந்த வகையில் "முந்தானை முடிச்சு" கதை இப்போ சொல்கிறேன் அப்போ சொல்கிறேன் என்று இழுத்தாரே தவிர கதை சொன்ன பாடில்லை. அப்போது ஏவிஎம் சரவணன் சார் கேட்டபோது எனக்கு ஒரு ஹோட்டலில் ரூம் போடுங்கள் அங்கு யாரெல்லாம் கதை கேட்க வேண்டுமோ அங்கே வர சொல்லுங்கள் நான் கதை சொல்கிறேன் என்றார். அவர் கேட்டது போல ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுக்கப்பட்டது. கையில் ஒரு துண்டு பேப்பர் சீட்டு கூட இல்லை ஆனால் கதை தொடக்கம் முதல் வசனம் என அனைத்தையும் விவரமாக விளக்கி முக்கியமான இடத்தில் ஒரு இடைவேளையும் விட்டு பிறகு சுபம் வணக்கம் வரை கதையை சொல்லி முடித்தார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் தனது மூளையில் கம்ப்யூட்டரில் பதிவானது போல வைத்திருந்தார். ஏவிஎம் நிறுவனத்திற்கே கண்டிஷன் போட்டு கதை சொன்னவர் இயக்குனர் பாக்யராஜ். அதனால் தான் இன்றும் திரைக்கதையில் அவர் ராஜா என்று அழைக்கப்படுகிறார். இப்போ பல பேர் அரைகுறையாக இருக்கிறார்கள். சொற்றொடர் சரியாக அமைக்க தெரியவில்லை. எனவே ஒருவர் உயர வேண்டும் என எண்ணினால் உன்னை அதற்கு கேட்டார் போல் தயார் செய்து கொள்வது அவசியம்" என்றார் இயக்குனர் எஸ். பி. முத்துராமன்.  


"நீர்க்குமிழி" அபசகுனம் என்றார்கள் :


மேலும் அவர் பேசுகையில் "இயக்குனர் பாலசந்தர் தனது முதல் படத்திற்கு "நீர்க்குமிழி" என்ற பெயரை வைத்தார். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் படத்திலேயே இது போன்ற அபசகுனமான பெயரை வைக்க வேண்டாம் என்றார்கள். இருப்பினும் இயக்குனர் பாலசந்தர் அந்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று வைத்தார். வைத்ததால் பாலச்சந்தர் என்ன தோல்வி அடைந்தாரா என்ன. பெயரில் இல்லை அபசகுனம். ஒருவரின் திறமையில் தான் அனைத்தும் உள்ளது என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்" என மிகவும் பெருமையாக பேசினார் திரு. எஸ்.பி. முத்துராமன்.