மாதவன் இயக்கி நடித்திருக்கும் ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின் உண்மையான கதாநாயகனான நம்பி நாராயணன் பற்றிய உண்மை கதை இது. 


பள்ளிப்படிப்பு 


விஞ்ஞானியான நம்பி நாரயணன் தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயிலை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே படிப்பில் கெட்டியாக இருந்த நம்பிநாரயணனுக்கு கணக்கு பாடம் என்றால் அவ்வளவு இஷ்டம். நாகர்கோயிலில் உள்ள டிவிடி உயர்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் மெக்கனிக்கல் பாடப்பிரிவில் பொறியியல் படிப்பை முடித்தார்.




அதனைத்தொடர்ந்து ஒரு சுகர் ஃபேக்டரியில் பயிற்சி இன்ஜினியராக பணியாற்றி வந்த அவர் குடும்ப சூழ்நிலை நிர்பந்தங்களால் அந்த வேலையை விட்டார். பின்னர் 1966 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்தார். 


இஸ்ரோவில் பணி


இந்திய விஞ்ஞானிகள் பலர் திட எரிபொருள்களை பயன்படுத்தி இன்ஜினை இயக்குவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், நம்பி நாரயணன் திரவ எரிபொருட்களை பயன்படுத்தி இன்ஜினை இயக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதனிடையே அவருக்கு இயற்பியல் அறிஞரான ஐன்ஸ்டீன் வகுப்பெடுத்த பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்ப்பு  கிடைத்தது.




அங்கு பிரபல பேராசிரியராக பணியாற்றி வந்த லியுகி க்ரொக்கோவிடம், கெமிக்கல் ராக்கெட் ப்ரொபல்ஷனில் மாஸ்டர் புரோகிராமை படித்து முடித்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கு நாசாவில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு பெரும் தொகையோடு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த நாரயணன் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி இஸ்ரோவில் பணியாற்றினார். பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் திட்ட இயக்குநர், கிரையோஜெனிக் திட்ட இயக்குநர், லிக்கியூடு ஃபியூயல் புரோபல்ஷன் துணை திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார்.


குற்றசாட்டு  


கடந்த 1994 ஆம் ஆண்டு  இந்திய நாட்டின் ஏவுகணை சார்ந்த ரகசியங்களை நம்பி நாராயணன் பாகிஸ்தான் விற்றதாக குற்றசாட்டப்பட்டது. அந்த குற்றசாட்டின் படி அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.




இது தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் அவரும், அவரது குடும்பமும் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்டார்கள். இந்த குற்றசாட்டுகளை விசாரித்த சிபிஐ, அவர் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை என்று கூறி 1996 ஆம் ஆண்டு அவர் மீதான் மனுவை தள்ளுபடி செய்தது.


நிராபராதி என தீர்ப்பு


உச்சநீதிமன்றமும் 1998 ஆம் ஆண்டு அவரை நிராபராதி எனக்கூறி தீர்ப்பளித்தது. இந்த சம்பவத்தால் உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட நம்பி நாரயணன் மனித உரிமை ஆணையம் மூலமாக கேரள அரசிடம் இழப்பீடு கோரினார். இதனையடுத்து மனித உரிமைகள் ஆணையம் கேரள அரசு நம்பி நாரயணனுக்கு இழப்பீடாக ஒரு கோடி வழங்க உத்தரவிட்டது. அதே ஆண்டில் நம்பி நாரயணனும் ஓய்வு பெற்றார்.  




ஆனால் இழப்பீடு தொகை அவருக்கு உடனடியாக கிடைக்க வில்லை. அதனைத்தொடர்ந்து நம்பி நாராயணன் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் பேரில் அவருக்கு 10 லட்சம் வழங்கப்பட்டது. இருப்பினும் தனது சட்டப்போராட்டத்தை தொடர்ந்தார்  நம்பி நாராயணன். இறுதியாக அவருக்கு கேரள நீதிமன்றம் 1.3 கோடியை இழப்பீடாக வழங்கியது. இவரது சாதனையை பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கெளரவம் செய்தது.