தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் எம்.எல்.ஏவும், சென்னை ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளருமான ரேவந்த் சரனைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை எச்சை இலை மற்றும் குப்பைகளை அகற்ற பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Continues below advertisement

2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ரேவந்த் சரண், திமுக வேட்பாளர் க. கணபதியை 61,509 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இது மாநில அளவில் கவனம் பெற்ற வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளராகவும், விஜயின் தீவிர ரசிகராகவும் அறியப்படும் ரேவந்த், தவெகவின் இளம் வேட்பாளர்களில் ஒருவராக களமிறக்கப்பட்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, மதுரவாயல் பகுதியில் நிலவும் சாலை, மழைநீர் வடிகால், போக்குவரத்து நெரிசல், தூய்மை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும், மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். தொகுதியில் பலமுறை நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

Continues below advertisement

துப்புறவு பணியாளர்களை எச்சில் இலை எடுக்க சொன்ன ரேவந்த்

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரேவந்த் சரண், வி.எஸ். பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விழாவையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உணவு நிகழ்ச்சி அருகிலிருந்த சென்னை குடிநீர் வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. உணவு முடிந்த பிறகு அங்கிருந்த எச்சை இலைகள் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சியின் 11-வது மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நேரத்தில் அவர்கள் தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இருந்தபோதிலும், எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்து பள்ளி மாணவியிடம் நடந்துகொண்ட விதம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதே நேரத்தில் தற்போது எம்.எல்.ஏ ரேவந்த் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தவெகவில் இளம் தலைமுறையினருக்கு பதவிகள் வழங்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. ஆனால் தவெக அதிகாரிகள் சாமானிய மக்களின் கண்ணியத்தைப் பற்றி எந்த வித புரிதலும் இல்லாதவர்களாக நிரூபனமாகி வருகிறார்கள்.