நடிகை ராதிகாவின் மூத்த மகள் ரேயான், தந்தை சரத்குமார் மற்றும் தாய் ராதிகா பற்றிய உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


தன் அம்மா போல் திரையில் ஹீரோயினாக வலம் வராமல் ராதிகாவின் ரேடான் நிறுவனப் பொறுப்புகளை வகித்து வெற்றிகரமாக சின்னத்திரை உலகில் வலம் வந்து சிறுவயதிலேயே கவனிக்க வைத்தவர் அவரது மூத்த மகள் ரேயான் மிதுன்.


குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு திரைப்படம் நடித்துவிட்டு அதன்பின் திரையில் இருந்து விலகிய ரேயான், தன் அம்மா ராதிகாவைப் போலவே உறுதியான பெண்ணாக வலம் வருகிறார். இந்திய கிரிக்கெட் வீரரான அபிமன்யு என்பவரை 2016ஆம் ஆண்டு கரம்பிடித்த ரேயான், தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனமீர்த்து வருகிறார்.


இந்நிலையில், தன் குழந்தைகளுடன் தன் தந்தை மற்றும் தாயான சரத்குமார் - ராதிகா இருவரும் நேரம் செலவிடுவது பற்றி உணர்வுப்பூர்வமான பதிவினைப் பகிர்ந்துள்ளார். “ஏன் என் பெற்றோர் சிறந்தவர்கள்?” எனும் கேப்ஷனுடன் ரேயான் பகிர்ந்துள்ள உள்ள வீடியோவில், சரத்குமார் - ராதிகா தம்பதி ரேயானின் மகளின் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் குழந்தைகளாக நேரம் செலவிடுகின்றனர்.


மேலும் அங்கு சென்று சரத்குமார் - ராதிகா இருவரும் தங்கள் பேரப்பிள்ளை உள்பட அனைவருக்கும் கதைகளைப் படித்து காண்பிக்கின்றனர். இந்நிலையில் ரேயான் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






முன்னதாக நடிகர் சரத்குமார் தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


மேலும், "பெண்களின்றி பெருமையுமில்லை, கண்களின்றி காட்சியுமில்லை என்றொரு பழமொழி உண்டு.  மக்களவை மற்றும் சட்டப்பேரவையில்  பெண்களுக்கென 33% இடஒதுக்கீடு கொடுத்து அவர்களை அங்கீகரித்த தலைவர் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஆவார். பெண்களை சக்தியின் வடிவமாக பார்க்கும் ஒரு மாமனிதரை இன்று முதன்முறையாக மேடையில் சந்தித்தது எனது பெருமையே! ” என்றும் தன் எக்ஸ் பக்கத்தில் நேற்று முன் தினம் ராதிகா பகிர்ந்திருந்தார்.


2007ஆம் ஆண்டு தொடங்கிய தன் அகில இந்திய சமத்துவக் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்தது முதல் சரத்குமார் - ராதிகா இருவர் மீதும் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ரேயான் தன் பெற்றோர் பற்றி இவ்வாறு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.