சேகர் கம்முலா இயக்கும் தனுஷின் 51-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


தனுஷ்


கோலிவுட்டின் மிக பிஸியான ஒரு நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாம பாலிவுட், ஹாலிவுட் என அவ்வப்போது தனது சில படங்களில் என்ட்ரி கொடுத்தும் வருகிறார் தனுஷ். தற்போது அருண் மாதேஸ்வரன்  இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதே நேரத்தில் பாலிவுட் இயக்குநர் ஆனந்த்.எல். ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ என்கிற படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ். மற்றொரு புறம் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார்


டோலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்


இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தப் படம் மூன்று மொழிகளில் வெளியிடப்பட இருப்பதாகவும் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகுக்குள் ஹீரோவாக தனுஷ் களமிறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாக இருக்கிறது.


கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பதே இந்தத்  தகவல். ஏற்கெனவே வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது முதல் முறையாக தனுஷுடன் இணைகிறாராம். மேலும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.


டி 51


 பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51-வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இந்தப்படத்திற்காக இணைய உள்ளார்.  


மிகப்பெரிய பட்ஜெட்


தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படம், நாராயண் தாஸ் கே நாரங்கின் ஆசிகளுடன், சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. சோனாலி நாரங் இந்த படத்தை தயாரிக்கிறார்.