நடிகர் ரஞ்சித் 'கவுண்டம்பாளையம்' படம் குறித்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தற்போது சமூகத்தில் அதிகரித்து வரும் ஆணவ கொலை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார். 


சமூகத்தில் பெண் பிள்ளைகளை வைத்து வியாபாரம் செய்ய நினைக்கும் சில கொடியவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ரஞ்சித்தின்  நல்ல உள்நோக்கம் புரிந்து இருந்தாலும் ஓ.சி.க கட்சியின் பெயரும் படத்திற்கு 'கவுண்டம்பாளையம்' என்ற டைட்டில் வைத்தது தான் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார் நடிகர் ரஞ்சித். 


 



 


”ஓ.சி.க பற்றின ஒரு பகுதியை சென்சார் போர்டில் நீக்கி விட்டார்கள். அதற்காக நான் அவர்களிடமும் போராடினேன்.  சரியான காதல் என்றால் நிச்சயம் பெற்றோர் அதற்கு சம்மதிக்க போகிறார்கள். காதலுக்கு எதிரி அல்ல. பெற்றோர்களை எதிர்த்து செய்யப்படும் திருமணங்களால் தான் பல ஆணவ கொலைகள் நடைபெறுகின்றன. மறுபக்கம் இதனால் எத்தனை பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் தெரியுமா? காதலிக்க ஒரு வயது இருக்கிறது. அப்படி அந்த வயதை எட்டியும் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் சொத்தில் பங்கு கேட்க மாட்டேன் என ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாடக காதல் ஒரு முடிவுக்கு வந்துவிடும். 


அம்மா அப்பாவை எதிர்த்து பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டால் ஒத்த பைசா கூட அந்த பெண் பிள்ளைக்கு கிடையாது என்ற ஒரு சட்டம் கொண்டுவந்தால் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.


பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே கவுண்டம்பாளையம் படத்தின் மூலக்கரு. யாரிடம் பேச வேண்டும்? என்ன பேச வேண்டும் என்ற பக்குவம் அவர்களுக்கு வர வேண்டும். வாழ்க்கையை தொலைத்த பெண்களின் பக்கத்தில் இருந்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விஷயங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். இதை பார்த்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். 


சமூக நீதி என்பது அவசியம் வேண்டும். அது காதலுக்கும் பொருந்தும். ஆனால் ஒரு வயதும் பக்குவமும் மிக மிக அவசியம் என்பதே என்னுடைய இறுதியன வாதம்” என்றார் நடிகர் ரஞ்சித்.