இதிகாச காப்பியமான ராமாயணம் அந்தந்த கலகட்டத்திற்கேற்ற தொழிநுட்பத்துடன் பல பதிப்புகளாக பல மொழிகளிலும் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாபெரும் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக 'ராமாயணம்' திரைப்படம் உருவாக உள்ளது. 


பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நமித் மல்ஹோத்ரா மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் நடிகர் யாஷும் இணைந்து தயாரிக்க, இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இப்படத்தை மூன்று பாகங்களாக இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது.


 



நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க ராவணனனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்கள். மூன்று பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. அதே வேலையில் ராமர் ரன்பீர் சிங் மற்றும் சீதை சாய் பல்லவி புகைப்படமும் தற்போது கசிந்து காட்டுத்தீ போல பரவின. 


ராமாயணம் படத்தின் முதல் பாகம் மட்டுமே சுமார் 835 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து காட்சிகளையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்காமல் ஒரு சில காட்சிகளை நேரடியாக அசல் காட்சிகள் போல எடுக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள மட்டுமே 600க்கும் மேற்பட்ட நாட்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.  


மிகவும் பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படம் மூலம் இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சேர்த்து பெருமைப்படுத்த வேண்டும் என்பது தான் படக்குழுவினரின் முக்கியமான நோக்கம். 


 



இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தான் ராமாயணம் படத்தின் காப்புரிமை தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தன. தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், மது மண்டேனாவின் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி நிறுவனம், அல்லு அரவிந்த் மற்றும் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நமித் மல்ஹோத்ரா ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது


இது குறித்த பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் மூவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இது தொடர்பாக பிரைம் ஃபோக்கஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் அல்லு அரவிந்த் மற்றும் அல்லு மன்டேனாவின் மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி. காப்புரிமை மீறல் காரணமாக எழுந்துள்ள இந்த சர்ச்சையால் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.