மாங்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால்வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்ற நிலையில் பணத்தை செலுத்திய நிலையிலும் ஊழியர்கள் அவதூறாக பேசியது அம்பலம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கணேஷ் அவென்யூ, சுபஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(31), தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூஜா குமாரி தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று இரவு வேலை முடித்துவிட்டு பூஜா குமாரி வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததால், கணவர் குடிபோதையில் தூங்கி கொண்டிருப்பதாக நினைத்து அருகில் இருந்த தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

காவல்துறை விசாரணை


 

இன்று காலை வழக்கம் போல் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மீண்டும் உள்பக்கமாக கதவு சாத்தப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை விசாரணையில் சீனிவாசன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததும் அதுமட்டுமின்றி ஆன்லைன் ஆப் மூலம் ரூ. 2 லட்சம் வரை கடன் பெற்றதாகவும், அதற்கான கடன் தொகையை செலுத்தியது தெரியவந்தது . மீண்டும் அதே தனியார் ஆப் மூலம் லிங்க்கை அனுப்பி கடன் கொடுத்ததாகவும், அந்த பணத்தை கேட்டு அவதூறாக பேசியதும் தெரியவந்தது .

 

 திடுக்கிடும் உண்மைகள்

 

மேலும் இவரது புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து அவருக்கு தெரிந்தவர்களின் செல்போன் நம்பர்களுக்கு அனுப்பியதும் அடிக்கடி வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டு அவதூறாக பேசியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கடனை அடைப்பதற்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கடனை அடைத்ததும் , மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தவர் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த விவரங்கள் குறித்து சேகரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நிலையிலும் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று அதனை செலுத்திய நிலையிலும் மீண்டும் கொடுக்காத கடன் தொகைக்கு பணம் கேட்டு மிரட்டிய நிலையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 



Suicidal Trigger Warning - தற்கொலை தீர்வல்ல



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)