பிரம்மாஸ்திரா படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்துள்ள ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு பிரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 






ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற பிரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூன், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தை நான்கு மொழிகளிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார். 






நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரம்மாஸ்திரம் பல வருட உழைப்பால் உருவானது. நமது புராணங்களில் அஸ்திரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதனை இந்தப் படத்தில் நாம் வேறு பரிமாணத்தில் பார்ப்போம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நாகார்ஜுனா, நான் எனது வாழ்க்கையை தொடங்கிய இடமான சென்னைக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும்,  புராணக் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். இதில் நந்தியாஸ்திரத்தின் சக்தி கொண்ட ஒரு கலைஞனாக நான் நடிக்கிறேன். கண்டிப்பாக பிரம்மாஸ்திரா திரையுலகில் மைல்கல்லாக இருக்கும் என தெரிவித்தார். 






பின்னர் பேசிய ரன்பீர் கபூர் அமிதாப் பச்சன் மற்றும் நாகார்ஜுனாவுடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது என கூறினார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்தும் பேசியுள்ளார். ரஜினியின் ஸ்டைல் பிடிக்கும். கமலைப் பற்றி பேசும் போது எனக்கு அப்பு கமலை ரொம்ப பிடிக்கும். அவர் சிறுவயதில் இருந்தே என்னால் மறக்க முடியாதவர் என தெரிவித்தார். இதேபோல் விஜய்யை பற்றி பேசும் போது அவரது பாடல்கள், நடனம், மிகவும் அன்பானவர் என கூறிய ரன்பீர், அஜித்தின் ஸ்டைல், அவரை வெளியில் பார்க்க முடியாத மர்மம்  ஆகியவை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.