இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (மார்ச்.17) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 


 



வான்கடே மைதானத்தில் சூப்பர் ஸ்டார் :


இந்நிலையில், நேற்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியை நேரில் சென்று கண்டுகளித்தார் நடிகர் ரஜினிகாந்த். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், அவருடன் சேர்ந்து போட்டியை ரசித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்ஸ் அள்ளின.


நேரில் சந்தித்த ரஜினிகாந்த் :


இந்நிலையில், இந்தப் போட்டியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில், இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் " ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என கேப்ஷனை பகிர்ந்துள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


குழப்பத்தில் நெட்டிசன்கள் :


தற்போது நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்'   திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


லால் சலாம் படம் கிரிக்கெட் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாக உள்ளது என்ற தகவல் ஏற்கெனவே வெளியான நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கிரிக்கெட் வீரர்களை நேரில் சந்தித்து பேசியதற்கும் 'லால் சலாம்' படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என சந்தேகம் எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.