சூப்பர் ஸ்டாரின் 47 வருட சினிமா வாழ்க்கையை பாராட்டும் விதமாக சென்னையில் வரும் மார்ச் 26ஆம் தேதி அவருக்கு மாபெரும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நடிகர் ரஜிகாந்தின் 47 வருட திரைத்துறை சேவையை கவுரவிக்கும் விதமாக வரும் 26ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'மனிதம் காத்து மகிழ்வோம்' விழாவினை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் நடத்துகிறது. 


ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயனராவ் கெய்க்வாட் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், இயக்குநர் எஸ்.பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைபுலி தாணு, அதிமுக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இயக்குநர்கள் பி, வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.


இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை - இருந்தாலும் அவர் பங்கேற்க வாய்ப்பு என கூறப்படுகிறது. 


திரை உலகில் ஜெயிக்க திறமை இருந்தால் போதுமென்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக தான்,  கடந்த ஆண்டு தந்து 73வது பிறந்த நாளைக் கொண்டாடிய சூப்பர் ஸ்டார், சில தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் ஆதர்ஷன நாயகனாக விளங்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் ஒரு கணம் திரும்பி பார்க்காத ஆளே இல்லை, ரசிகர்கள் அவர் வசனம் பேச நாளில்லை. நாள்தோறும் நாம் பயன்படுத்தும் பல மேனரிசங்களின் பிறப்பிடம், ஸ்டைலின் இருப்பிடம். விழுந்தால் எழ முடியாத யானையாக அல்லாமல், சீறிப்பாயும் குதிரையையாய் எழுந்து வெற்றிகளை தனதொரு அங்கமாக்கியவர். 


”பஞ்ச்னா ரஜினி, ரஜினின்னா பஞ்ச்" எனும் வகையில் அவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் தீப்பொறி பறக்க, அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரச் செய்யும் வகையிலான பல அதிரடி வசனங்களையும் ரஜினி பேசி ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் அரசியலா ”நோ” என எண்ட் கார்ட் போட்ட ரஜினியே, நாளடைவில் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” என பேச அவரது ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் ஆசை தொற்றிக்கொண்டது.


அனல் பறந்த வசனங்கள்:


1993ல் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் வருகைக்காக போயஸ் கார்டனில் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ரஜினி எங்கும் பேசியதில்லை. ஆனால், அதற்கடுத்த சில மாதங்களில் வெளியான அண்ணாமலை திரைப்படத்தில், எம்பாட்டுக்கு என் வேலையை செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்" என பேச, இது எங்கயோ இடிக்குதேன்னு தமிழக அரசியல் சூடு பிடித்தது. அடுத்த வந்த உழைப்பாளி படத்துலயும், நேற்று கூலி, இன்னைக்கு நடிகன், நாளை.. அப்டின்னு பாதியில பஞ்ச் டயலாக்க முடிச்சு, செய்தியாளர்களுக்கான ஆல்டைம் ஃபேவரட் கண்டெண்ட் ஆக மாறினார் ரஜினி. அவருக்கு அவரது ரசிகர்கள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழா அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.