சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. சீனு ராமசாமியுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் யுவன் ஷங்கர் ராஜா 'மாமனிதன்' திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். 






இந்தப் படத்தில் ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது. இந்நிலையில்,  மாமனிதன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு படத்தில் இடம்பெற்ற தட்டிப்புட்டா தட்டிப்புட்டா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 






மேலும் பாடல் சூப்பர் ஹிட் ஆனதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.படம் மே மாதம் 20ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த ரஜினிகாந்த் தனக்கு நள்ளிரவில் போன் செய்து பாராட்டியதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். மாமனிதன் இசை வெளியீட்டின்போது பேசிய சீனு ராமசாமி இதனை தெரிவித்தார்.


நள்ளிரவு போன்..


நள்ளிரவு 3 மணிக்கு எனக்கு ஒரு போன் வந்தது. மாமனிதன் பார்த்துவிட்டு ரஜினிகாந்த மனம் நிறைந்து பாராட்டினார். விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பு என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பாராட்டினார். நான் ஒரே வார்த்தை சொன்னேன். ''ரொம்ப தெம்பா இருக்கு சார். நன்றி'' என்றேன். அந்த நேரத்தில் இதனை யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி ரஜினிகாந்த் பாராட்டியதைச் சொல்லி செல்போனை காண்பித்தேன். விஜய்சேதுபதி இல்லாமல் இந்தப்படம் இல்லை. யுவனுக்கு இப்படம் ஒரு குழந்தைபோலதான் என்றார்.