லிவிங் டூ கெதர் ஓகே தான் எனக் கூறி தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகையும், மாடலுமான ரைஸா வில்சன்.


ரைஸா, பிக்பாஸ் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் விறுவிறுப்பாக இயங்கும் இவர் அண்மையில் வீடியோ லைவ் ஒன்றில் ரசிகர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் தான் இப்போது வைரலாகி வருகிறது.
ரசிகர் ஒருவர் உங்களுக்கு லிவிங் டூ கெதரில் உடன்பாடு இருக்கிறதா எனக் கேட்டார். அதற்கு ரைஸா, "லிவிங் டூ கெதர் எனக்கு ஓகே. அதில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டும்? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும்?" என்று தெரிவித்திருக்கிறார். ரைஸாவின் இந்த பதில் அவரது ரசிகர்கள் பலரை உசுப்பேற்றிவிட்டுள்ளது.






ரைஸா விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமானார் என்றாலும் கூட அதற்கு முன்னதாகவே 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் அவருக்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிக்பாஸ் பாய்ச்சிய வெளிச்சத்தால், இப்போது பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார்.


2018-ல் 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்போது, இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. லாக்டவுனின் போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான, 'தி சேஸ்', விஷ்ணு விஷாலுடன் எஃப்.ஐ.ஆர், ஜி.வி.பிரகாஷுடன் 'காதலிக்க யாருமில்லை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபு தேவாவின் அடுத்த படத்திலும் ஒப்பந்தமானார் ரைஸா. அந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


ரைஸாவும் மீடியா வெளிச்சமும்..


பிக்பாஸ் சீசன் ஒன்று பலருக்கும் திரைத்துறையில் தடம் பதிக்க பெரும் துணையாக இருந்தது. ஓவியாவுக்கு இன்னொரு ரவுண்ட், ஆரவ்க்கும் பட வாய்ப்பு எனப் பலரையும் பளிச்சிடச் செய்தது. அப்படித்தான், ரைஸாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரைஸா அந்த வெள்ளித்திரை வெளிச்சத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
அதே நேரம் தன் மீது எப்போதும் ஊடக வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அதனாலேயே தான், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். 


ஒருமுறை முக அழகு சிகிச்சை எடுக்கச் சென்றபோது அழகு நிலையத்தில் தவறான சிகிச்சை தந்ததாகக் கூறி அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது முகப் பொலிவு சிதைந்ததற்காக சம்பந்தப்பட்ட அழகு நிலையம் தனக்கு ரூ.1 கோடி தர வேண்டும் எனக் கூறினார். மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பிய அவருக்கு அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் பைரவி செந்தில் பதில் நோட்டீஸ் அனுப்பி ஷாக் கொடுத்தார்.