ராகவா லாரன்ஸ்


தன் படங்கள் தாண்டி தான் செய்யும் உதவிகளின் மூலம் அதிகம் அறியப்படும் நடிகர் ராகவா லாரன்ஸ். கொரியோகிராஃபர், நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் பணியாற்றி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், மற்றொரு புறம் தான் செய்யும் உதவிகளின் மூலம் என்றும் லைம்லைட்டில் இருந்து வருகிறார்.


மாற்றுத் திறனாளி திறமையாளர்களை ஊக்குவிப்பது, நடன பயிற்சி கொடுப்பது, கஜா புயலின் போது உதவியது எனத் தொடங்கிய இவரது முயற்சிகள் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து பலரை திரை மறைவில் படிக்க வைத்தும் உதவிகள் புரிந்தும் வருகிறார்.


விமர்சனங்கள் தாண்டி உதவிப் பணி




ஒருபுறம் தன் படங்களின் ரிலீசின்போது இப்படி ப்ரோமோட் செய்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ராகவா லாரன்ஸ் தன் உதவிப் பணிகளை தொடர்ந்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது சிறுவயது முதல் 20 ஆண்டுகள் தான் படிக்க வைத்து வளர்த்து தற்போது டிகிரி படித்து முடித்துள்ள இளைஞரை ராகவா லாரன்ஸ் அறிமுகப்படுத்தி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


20 ஆண்டு கனவு


“வார்த்தைகளை விட செயல் தான் அதிகம் பேசும். புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவசக்தியின் கதை இது. அவருக்கு 4 வயதாக இருந்தபோது, ​​​​அவரது தாய் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். அவரது தந்தை குடும்பத்தை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில், சிவசக்தியையும், அவரது சகோதரியையும் கவனித்துக் கொள்ள வேண்டி அவரது தாய் வந்தார்.


அவர்கள் இருவரும் என் வீட்டில் வளர்ந்தவர்கள், எனது ஆதரவுடன் சிவசக்தி தற்போது கணிதத்தில் பிஎஸ்சி முடித்துவிட்டு தனியார் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகிறார். சப்-இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற தனது கனவை நோக்கி அவர் உழைத்து வருகிறார். சிவசக்தியும் தனது வெற்றியை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துவார். கல்விதான் உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம். சேவையே கடவுள்” எனப் பதிவிட்டுள்ளார்.


வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி


மேலும் இந்த இளைஞருடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ் “இது எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். என் 20 ஆண்டு கனவு இன்று நனவாகியுள்ளது. இவர் சின்ன வயதில் குட்டியாக என்னிடம் ஓடி வந்தார். நான் போட்ட விதை இப்பொது மரமாகி நிற்கிறது.


இந்த 2 குழந்தைகள் தொடங்கி அப்படியே 60 குழந்தைகள் வரை வளர்ந்து வரிசையாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்கு வீட்டை விட்டு விட்டு நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அப்போது வீட்டைக் கொடுக்கும்போது கஷ்டமாகதான் இருந்தது. ஆனால் இவர்கள் வளர்ந்து வரும்போது அந்தக் கஷ்டமெல்லாம் போய் விடும். இதே மாதிரி ஒரு ராகவா லாரன்ஸ் இவர் வழியாக சேவை செய்ய வருகிறார்” எனக் கூறி எமோஷனலாக பேசியுள்ளார்.


 






மேலும் இந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் போலவே தற்போது பல்வேறு உதவிப் பணிகளை மேற்கொண்டு வரும் மற்றொரு சின்னத்திரை நடிகரான கேபிஒய் பாலாவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் மனங்களை வென்று வருகிறது.