ராயன் முதல் நாள் வசூல் :


நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் , செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி ராயன் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 12.5 கோடி வசூலித்துள்ளது. தமிழில் இப்படம் 11 கோடியும் தெலுங்கில் 1.5 கோடியும் வசூலித்துள்ளது. 



ஜான் விஜய் மீது அத்துமீறல் புகார் :


தமிழ் சினிமாவில் வில்லனாக, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜான் விஜய். மீ டூ மூலம் திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி தற்போது ஜான் விஜய் மீது அத்துமீறல் சார்ந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜான் விஜய் பற்றி பெண் ஒருவர் பகிர்ந்த மெசேஜை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்புகளுக்கு வரும் பெண்களுக்கு தொடர்ந்து ஜான் விஜய் தொல்லை கொடுத்து வருவதாகவும் 'நோ' என சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் செலிபிரிட்டி என்பதால் அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட அந்த பெண். இது திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


சுதா கொங்காரா மன்னிப்பு :


தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் சுதா கொங்கரா நேர்காணல் ஒன்றில் சாவர்க்கர் தன்னுடைய மனைவி படிக்க வேண்டும் என விருப்பப்பட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் என தன்னுடைய பள்ளி ஆசிரியர் சொன்ன கதையை கேட்டு அவரை புகழ்ந்து பேசியுள்ளார். அவரின் வீடியோ வைரலானதால் சாவர்க்கரைக் காட்டிலும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஜோதிராவ் புலே மற்றும் சாவித்தி பாய் புலே பெண்கள் கல்வி கற்கபதற்கு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுத்தது சாவர்க்கரை புகழ்வது எப்படி சரியாகும் என்று பலர் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சாவர்க்கரை புகழ்ந்து பேசியது தவறு எனவும் அந்த தவறுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 


 


ஜான்வி கபூருக்கு வந்த அழைப்பு :


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவரா படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூர் தனக்கு பிடித்தமான உணவு வகைகளைப் பற்றி பேசினார். அப்போது இட்லியுடன் கறி குழம்பு தனக்கு பிடித்தமான காம்போ என்றும் தனது தந்தைக்கும் அது பிடித்தமான காம்போ என்றும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் அவர் “ ஒருமுறை காரைக்குடி வாங்க. இட்லி ,கறிக்குழம்பு , வெள்ள கறி குருமா , மீன் குழம்பு, பாயா என எல்லாம் சாப்பிடலாம் “ என்று கூறியுள்ளார். இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது



ரன்வீர் சிங் - மாதவன் :


மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பளரான ஆதித்யா தார் இயக்கும் புதிய ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் , சஞ்சய் தத் , அக்‌ஷய் கண்ணா , அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இப்படம் உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.