பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் வெளியீடு


பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் (R Parthiban) இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டீன்ஸ்’. பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்தது.


தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய், வரும் ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படத்துடன் பார்த்திபனின் டீன்ஸ் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிரபலங்களின் காதல், அதிகரித்து வரும்  விவாகரத்து உள்ளிட்ட விஷங்கள் பற்றி மனம் திறந்து பேசியதாவது:


விவாகரத்து பற்றி பார்த்திபன்


“நேற்று நாம் செய்த விஷயம் தப்பு என்று நமக்கு இன்று தோணும், நமக்குள்ளேயே கருத்து முரண் ஏற்படும்போது இரண்டு பேருக்குள் கண்டிப்பாக ஏற்படும். காதல் சுவாரஸ்யமான விஷயம், விவாகரத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால் மனது ஒட்டவில்லை, என்றால் உடனே பிரிந்துவிடுவது நல்லது. அடுத்த தருணத்தை நமக்கென்று நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அது என் பெண்ணாக இருந்தாலும் சரி.


அந்தக் காலத்தில் இருந்தே இதற்கு பஞ்சாயத்து இருக்கும். திருமண உறவு சரியாக வரவில்லை என்றால், ஒருமுறை விரிசல் ஏற்பட்டுவிட்டால் அவரவர் சென்று அவரவர் வாழ்க்கையைப் போய் வாழ வேண்டியது தான். நான் கலாச்சாரம் சார்ந்து பேசவில்லை. நான் ஒரு தனி மனதை தான் பார்க்கிறேன். கல்யாணம் ஆகி, குழந்தை வந்துவிட்டது, இப்படியே தான் இருக்க வேண்டும் என்றால் சாகும் வரை அவர்கள் சங்கடத்தை தான் பார்ப்பார்கள்.


அம்மா - அப்பா பிரிவதில் சிக்கல்




எனக்கு தெரிந்து இப்போது எல்லா அம்மாவும் தங்கள் மகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், சங்கடத்தில் இருக்கக்கூடாது என்று தான் நினைக்கிறார்கள். கணவன் - மனைவி இருவர் பிரியலாம். அம்மா - அப்பா பிரிவதில் தான் சங்கடம் உள்ளது. திருமணம் ஆனதும் உணர்ச்சிவசப்பட்டு 2, 3 குழந்தைகள் பெற்று விடுகிறோம். இதையெல்லாம் யோசிக்க அப்போது இடமிருக்காது. மேலும் இது அவரவரின் தனிப்பட்ட சுதந்திரம். இது என்னுடைய கருத்து தான். எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.


காதல் என்பது ஆண் - பெண்ணுக்குள்ளான ஈர்ப்பு. நான் ஒரு காலத்தில் வறுமை காரணமாக மிகுந்த தாழ்வு மனப்பான்மையில் இருந்தேன். அந்தக் காலத்தில் தான் நிறைய காதல் வந்தது. காதல் மீண்டும் மீண்டும் வருகிறது. கவிதை வருகிறது. காதல் வற்றி விட்டால் வாழ்க்கையே வீண்” எனப் பேசியுள்ளார்.


1990ஆம் ஆண்டு நடிகை சீதா - பார்த்திபன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2001ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு நடிகை கீர்த்தனா உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.