Pushpa2: ஃபஹத் பாசில் பிறந்தநாளையொட்டி புஷ்பா 2 படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் புஷ்பா. 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. ராஜமவுலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட் ஆன தெலுங்கு படம் என்ற சாதனையையும் புஷ்பா படைத்தது. இதில் அல்லு அர்ஜூனுடன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா தி ரூல் இணையத்தில் டிரெண்டாகியது. புஷ்பா ஸ்டைலும், அல்லு அர்ஜூன் நடனத்தையும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரீல்சாக வெளியிட்டு வந்தனர். 


புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை, தாய்லாந்து பகுதிகளில் ஷூட்டிங் நடந்ததாகவும், இரண்டாம் பாகத்தில் ஃபஹத் பாசில் மெயின் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிப்பதாகவும் தகவல்கள் வெளிகியாகின. இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் அல்லு அர்ஜூன் பிறந்தநாளையொட்டி டீசரை படக்குழு வெளியிட்டது. அதை பார்த்த ரசிகர்கள் புஷ்பா 2 மாஸ் ஹிட்டாகும் என கூறி வந்தனர். அல்லு அர்ஜூனை எதிர்க்கும் ஐபிஎஸ் அதிகாரியாக ஃபஹத் பாசில் நடிக்கும் புஷ்பா 2-இல், கேமியோ ரோலில் மோகன்லாலும், அக்‌ஷய் குமாரும் நடிப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. 


இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபஹத் பாசிலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டும் வில்லனாக இருக்கும் அவரின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அண்மையில் வெளியான மாமன்னன் படத்தில் வில்லனாக ரத்னவேலுவாக நடித்த ஃபஹத் பாசிலை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடினர். வில்லனை கொண்டாடும் அளவுக்கு ஃபஹத் பாசில் நடிப்பில் மிரட்டி இருந்தார். 


இந்த நிலையில் புஷ்பா 2-ல் மீண்டும் ஃபஹத் பாசிலின் மிரட்டல் நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ரத்னவேலு கேரக்டரை பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். புஷ்பாவின் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இடம் பெற்றிருந்த உ சொல்றீயா.. ஊ ஊ சொல்றீயா பாடலும், அந்த பாடலுக்கு சமந்தா ஆடிய நடனமும் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு மாஸ் குத்து பாடலை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.