அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் நடிக்க கார்த்தி மிகவும் யோசித்ததாக நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 


பருத்தி வீரன்:


கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் ‘பருத்தி வீரன்’ படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் ப்ரியாமணி, பொண்வண்ணன், சுஜாதா விஜயகுமார், சரவணன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.  இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் செய்த மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். 


அதில், “நான், கார்த்தி, இயக்குநர் சுதா கொங்காரா  ஆகிய 3 பேரும் ஆல்பர்ட் தியேட்டரில் அமீர் இயக்கிய ராம் படம் பார்த்தோம். அந்த படம் கார்த்திக்கு பிடிக்கவேயில்லை. சொல்லப்போனால் புரியல. உடனே அவர் என்னிடம், ‘இல்லை. எனக்கு ரிஸ்க் எடுக்குற மாதிரி தெரியுது. டைம் வேணும்’ என சொல்லிட்டாரு. அப்புறம் நானும், சூர்யாவும் கார்த்தியை சமாதானம் செய்து பண்ண வச்ச படம் தான் “பருத்தி வீரன்”. யாரும் அமீர் வீட்டு வாசல்ல போய் வாய்ப்பு கேட்டு நிக்கல. 


தொழில் கற்றுக்கொண்டார்:


ரூ.2.75 கோடி பட்ஜெட்ல எடுக்குறேன்னு சொன்ன படத்தை ரூ.4.85 கோடி ரூபாய் வரைக்கும் கொண்டு வந்து விட்டாரு. 6 மாசத்துல ஷூட்டிங் முடிக்கிறேன்னு சொல்லி இரண்டரை ஆண்டுகள் படம் எடுத்தார். கிட்டதட்ட 4 படங்கள் எடுக்க வேண்டிய நீளம் அந்த படத்தின் காட்சிகள் இருந்தது. என்னோட பணத்தைக் கொண்டு அவர் தொழில் கற்றுக் கொண்டார் என்பதே உண்மை. 


ஏதோ ஒரு பேட்டியில நான் சூர்யாவை பார்க்க அவர் வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். அப்ப துறுதுறுன்னு ஒரு பையன் ஓடிட்டு இருந்தான். அதுதான் கார்த்தி என சொல்லியிருப்பார். அமீர் ஒன்றும் பாரதி ராஜா இல்லை. ஸ்பாட்டில் ஹீரோவை கண்டுபிடித்த கதை மாதிரியான சீன் இல்லை. வாங்குன காசுக்கு தான் அவர் படம் பண்ணினார். இப்ப கூட ஆர்யாவை வச்சு படம்  ஆரம்பிச்சாரு. என்னோட ப்ரண்ட் தான் அதை தயாரிச்சாரு.


ரூ.10 கோடில படம் பண்ணித்தர்றேன்னு சொல்லி ரூ.7 கோடி அட்வான்ஸ் வாங்கிருக்காரு. 10 சதவிகிதம் படம் கூட முடியல. பணம் போனால் போகட்டும் என என் ஃப்ரண்ட் படத்தையே நிப்பாட்டி விட்டார். இதெல்லாம் நடந்து முடிந்து 16, 17 வருஷம் ஆச்சு. அமீர் தன் மீது கேஸ் போட்டுருக்காங்க என சொல்லி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் மீது அவரே போட்டுக் கொண்ட கேஸ். அந்த வழக்கு ஞானவேல் ராஜா, சிவகுமார், சூர்யா, கார்த்தி, தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் மீது கேஸ் போட்டுருக்கார்” 


இன்னைக்கு வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு சூர்யா தன்னை வேண்டாம் என சொல்லிவிடுவாரோ என்ற பயம் அமீருக்கு உள்ளது. 15 ஆண்டுகளாக பேசாதவர் இப்போது சூர்யா ரொம்ப நல்லவரு, என் நண்பர் என சொல்லிட்டு இருக்காரு. அமீர் அம்மா இறந்தபோது கார்த்தி போயிட்டு தான் வந்தாரு. அவர் சரியாக நடந்திருந்தால் தலையில் தூக்கி வச்சி கொண்டாடி இருப்போம்” என தெரிவித்துள்ளார்.