பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய் ஜோடியாக 'தமிழன்' என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அதற்கு பிறகு  பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரியங்கா சோப்ரா அங்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.


அடுத்த கட்டமாக ஹாலிவுட் வெப் சீரிஸ் 'குவாண்டிகோ' மூலம் அறிமுகமானார். அந்த வெப் சீரிஸ் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் பெற்று ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜான் சினா மற்றும் இட்ரிஸ் எல்பா உடன் இணைந்து 'ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்' என்ற ஹாலிவுட் படத்தில்  நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா. மேலும் ஹாலிவுட் வெப் சீரிஸ் “சிட்டாடல்” தொடரிலும் விரைவில் வெளியாக உள்ளது. 


 



இந்தியாவில் குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா :


இப்படி உலகளவில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விடவும் 10 வயது இளையவரான பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் மால்டி மேரி என்ற பெண் குழந்தை உள்ளது.


தனது கணவர் மற்றும் மகளுடன் முதல் முறையாக கடந்த வாரம் இந்தியா வந்து இருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. நீடா அம்பானியின் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவுக்கு வந்தவர் விரைவில் வெளியாக இருக்கும் “சிட்டாடல்” வெப் சீரிஸின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த சீரீஸின் முதல் எபிசோட் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்வாமி தரிசனம் :


அந்த வகையில் தனது மகள் மால்டி மேரி மற்றும் கணவர் நிக்குடன், மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு பாரம்பரிய உடையில் குடும்பமாக சென்று ஸ்வாமியை தரிசனம் செய்து வழிபட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அவை தற்போது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. பலரும் குழந்தை மால்டி மேரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.