நடிகர் பிரபு தேவா தனது மனைவி, கைக்குழந்தையுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.


நடிகர் பிரபு தேவா


திரையுலகில் பிரபு தேவா, நடிகர், நடன இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என தனது பன்முக திறமைக்கு பிரபலமானவர். அவருடைய திரைப்பயணம் சவால்களால் நிறைந்தது. பாடல் காட்சிகளில் வரும் டான்ஸ் ஸ்டெப்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிரபு தேவா தனது நடிப்பிலும் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் சமீபத்தில் ஆதிக் ரவிசந்திரனின் ‘பகீரா’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அறிவியல் புனைகதை திகில் திரைப்படமான, ஓநாய் படத்தில் பிஸியாக இருக்கிறார். தேவி படத்திற்கு பிறகு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படம்.


பிரபு தேவா - தனிப்பட்ட வாழ்க்கை


 நடனம் ஆடும் ரமலத் என்பவரை பிரபுதேவா காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் திரைப்பயணத்தில் ஆரம்ப காலக்கட்டத்தில் காதலித்தனர். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில்,கடந்த 2008-ஆம் ஆண்டு இவர்களது மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்தார் . அதனைத் தொடர்ந்து முதல் மனைவி ரமலத் உடனான பல்வேறு கருத்து வேறுபாடுகள், நடிகை நயன்தாராவுடனான காதல் என தொடர்ந்து பிரபு தேவாவின் தனிப்பட்ட வாழ்க்கை பேசுபொருளாகி வந்தது. இந்நிலையில் 2011- ஆம் ஆண்டு பிரபுதேவா - ரமலத் தம்பதி விவாகரத்து பெற்றனர்.


அதன் பின் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்த நடிகர் பிரபுதேவா, கொரோனா ஊரடங்கின் காலத்தில் 2020ஆம் ஆண்டு ஃபிசியோதெரபிஸ்ட்டான ஹிமானியை  திருமணம் செய்துகொண்டார்.




50 வயதில் அப்பா


பிரபுதேவா - ஹிமானி சிங் இருவருக்கும் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இருவரும் இது தொடர்பான எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தாமல் இருந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்., “எனக்கு குழந்தை பிறந்துள்ளது உண்மைதான், இந்த வயதில் (50) மீண்டும் நான் தந்தையாகியுள்ளேன்; நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்.நிறைய வேலை செய்துவிட்டதாக தோன்றுகிறது, அதனால் எனது பணிச்சுமையை ஏற்கெனவே குறைத்து விட்டேன். எனது குடும்பம் மற்றும் மகளுடன் இனி நேரம் செலவிட விரும்புகிறேன்” எனக் கூறியிருந்தார். 


மகளுடன் திருப்பதி கோயிலில் தரிசனம்


நடிகர் பிரபு தேவா, தனது மனைவி ஹிமானி, மகளுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். இவர்கள் சிறப்பு வழியில் செல்லாமல், பொதுமக்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பிரபு தேவாவைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தன் மகளை பிரபு தேவா முதன் முறையாக அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். பிரபு தேவா தன் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.




பழம்பெரும் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மகனான பிரபுதேவா, கொரியாகிராஃபர், நடிகர், இயக்குநர் என பன்முக நாயகனாக தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  கோலோச்சி வருகிறார். மேலும், இவரது சகோதரர்களான ராஜூ சுந்தரம், நாகேந்திரப் பிரசாத் இருவரும் திரை பிரபலங்கள்தான்.


இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தைகளே உள்ள நிலையில், சுந்தரம் மாஸ்டரின் குடும்பத்தில் பிரபுதேவாவுக்கு தான் முதன்முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.