நடிகர் பிரபுதேவா ஹிமானி சிங் எனும் பிசியோதெரபிஸ்டை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில்,  ஏப்ரல் மாதம் தன் பிறந்தநாளின் போது அவர் ஹிமானி சிங் உடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


பெண் குழந்தை


இந்நிலையில், பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்த மகிழ்ச்சியில் தான் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாகவும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.


முன்னதாக தன் கரியரின் ஆரம்ப காலக்கட்டத்தில் டான்சரான ரமலத் என்பவரை பிரபுதேவா காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் 2008ஆம் ஆண்டு இவர்களது மூத்த மகன் கேன்சரால் உயிரிழக்க தொடர்ந்து பல்வேறு கருத்து வேறுபாடுகள், நடிகை நயன்தாராவுடனான காதல் ஆகிய காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று 2011ஆம் ஆண்டு பிரிந்தனர்.


இரண்டாவது திருமணம்


தொடர்ந்து 2012ஆம் ஆண்டு நயன்தாராவுடனான காதலும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிசியோதெரபிஸ்ட்டான ஹிமானியை கொரோனா ஊரடங்கின் மத்தியில் 2020ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் பிரபுதேவா.


இந்நிலையில் பிரபுதேவா - ஹிமானி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்ததாகவும், அதனால் தான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிரபுதேவா தன் பிறந்தநாளில் மனைவியுடன் வருகை தந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜூ சுந்தரம், நாகேந்திரப் பிரசாத் இருவருக்கும் ஆண் குழந்தைகளே உள்ள நிலையில், சுந்தரம் மாஸ்டரின் குடும்பத்தில் இதுவே முதல் பெண் குழந்தை, இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது 50 வயதை பிரபுதேவா எட்டியுள்ள நிலையில், முன்னதாக இவரது நடிப்பில் பஹீரா திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்த நிலையில், இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது.


அடுத்ததாக பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் பூஜை சென்ற வாரம் தொடங்கியது. 


புளூ ஹில் ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். காமெடி கலந்து கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகும் நிலையில், ஹீரோயினாக நீண்ட நாள்களுக்குப் பிறகு நடிகை வேதிகா நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Por Thozhil: மிரட்டும் திரைக்கதை... போர் தொழில் படம் பார்க்க கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்..!