நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள போர் தொழில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 


E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘போர் தொழில்’. இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நேற்று தியேட்டரில் வெளியாகியிருந்தது. 


திருச்சியில் நடக்கும் தொடர் பெண் கொலைகளில்  மூத்த காவல்துறை அதிகாரியான சரத்குமாரும், இளம் காவல் அதிகாரியான அசோக் செல்வனும் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்க முயலும் களமே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களது கேரக்டருக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கதையில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாதியிலேயே கொலையாளி யார் என கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்ற போதிலும் இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் கட்டிப்போடுகிறார்கள். 


மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் பார்க்க விரும்புவர்கள் போர் தொழில் படத்தை தாராளமாக பார்க்கலாம் என படம் பார்த்தவர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது க்ரைம் த்ரில்லர் கதையா அல்லது பேய் படமா என்னும் அளவுக்கு பின்னணி இசையில் ஜேக்ஸ் பிஜோய் மிரட்டியுள்ளார். காலையில் இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் மாலை முதல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக உள்ளது. இன்றும் பல காட்சிகளுக்கு முன்பதிவு மிகவும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இதுதொடர்பான வீடியோ ஒன்றை நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்துள்ளார். திரைக்கதை தரமாக இருந்தால் மினிமம் பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, பெரிய ஹீரோக்கள் இல்லாத படமாக இருந்தாலும் சரி மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் “போர்தொழில்” படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Por Thozhil Review: சீரியல் கில்லர் கதை...சீட்டின் நுனியில் உட்கார வைத்ததா? ’போர் தொழில்’ திரைப்படத்தின் முழு விமர்சனம்!