தமிழில் இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் நடித்த முதல் படமே படு தோல்வியடைந்ததால், வழக்கம் போல் இவரை மற்ற தமிழ் இயக்குனர்கள் கண்டு கொள்ளவே இல்லை. தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், போன்ற நடிகர்களின் முதல் சாய்ஸ் ஹீரோயினாக உள்ளார். அதே நேரத்தில் தற்போது ஹிந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கதவை தட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் ரன்வீர், மற்றும் சல்மான் கானுடன் நடிக்க உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் விஜய் திரைப்படத்தின் மூலமாக திரும்புகிறார். இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே தான் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், லாக்டவுன் காரணமாக நடக்காமல் இருந்த 2019ஆம் ஆண்டுக்கான ஆறாவது சைமா விருதையும் ஏழாவது சைமா விருதுகளோடு சேர்த்து அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் ஆறாவது மற்றும் ஏழாவது சைமா (Siima) விருதுகள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. நடிகை பூஜா ஹெக்டே ஆள வைகுன்னபுரம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். அதே திரைப்படம் வெவ்வேறு கேட்டகிரிகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றுள்ளது. அந்த திரைப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்த திரைப்படத்தின் இயக்குனர் த்ருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் சிறந்த இயக்குனருக்கான விருதையும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணா சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.



இந்த விருது விழாவில், மஞ்சள் நிற சேலையில் கலந்து கொண்ட பூஜா, மிகவும் மகிழ்ச்சியோடு இந்த படத்திற்காக போட்ட உழைப்பு வீண் போகாமல் விருதுகளை கிடைக்க வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து படுக்கையில் விருதின் பக்கத்தில் படுத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸடாகிராமில் ஸர் செய்து, "தினமும் நான்கு மணிக்கு எழுந்து வேலைக்கு செல்வதன் பின்னால், இப்படி ஒரு விருது ரிசால்டாக இருக்கும்" என்று எழுதி போஸ்ட் செய்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர், பூஜாவுக்கும் படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.