விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பேபி நிறுவனம், 7 Screen Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்தான் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா, சம்ந்தா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்க , விக்னேஷ் சிவன் படத்தை இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில்  கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 18) விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது. “two two two ” என தொடங்கும் இந்த பாடலை சரியாக் 2.22 மணிக்கு வெளியிட்டனர். இந்த வீடியோவில் அனிருத் பல கெட்டப்புகளில் நடனமாடி அசத்தியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வரும் சூழலில்  யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை இரண்டு நாட்களில் கடந்துள்ளது.






இந்நிலையில் பாலிவுட், ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறி அனிருத் மற்றும் விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார். மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து , விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறி ட்வீட் செய்துள்ளார். இதற்கு விக்னேஷ் சிவன் , அனிருத், சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் நன்றி தெரிவித்து ரீ-ட்வீட் செய்துள்ளனர்.இந்த ட்வீட் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.






 


பிரியங்கா சோப்ரா முதன் முதலில் விஜயுடன் தமிழன் படம் மூலமாகத்தான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார், ஆனால் இங்கு அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு பல தடைகளை தகர்த்து  பாலிவுட்டின்  முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும், ஹாலிவுட்டின் சில படங்களிலும் நடித்து வருகிறார். அங்கு பிரபல பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்துக்கொண்டு , ஹாலிவுட்டின் முக்கிய நாயகிகளுள் ஒருவராக இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினருக்கு , பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பிரியங்கா சோப்ரா தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளாரோ என நெட்டிசன்கள் கிசு கிசுத்து வருகின்றனர்.