பொன்னியின் செல்வன் பட பாடல்கள் ஸ்பாட்டிஃபை செயலியில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்றது. 






இதனைத் தொடர்ந்து படத்தின் 2 பாடல்கள் வெளியானது. அதன்பின்  படத்தில் இடம் பெறும் கேரக்டர்களை லைகா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் மற்றும் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, ரவிதாசனாக கிஷோர், ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம், பார்த்திபேந்திரன் பல்லவனாக விக்ரம் பிரபு, பெரிய வேளாளராக பிரபு, மலையமானாக நடிகர் லால், சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தகனாக ரஹ்மான், வானதியாக சோபிதா துலிபாலா ஆகியோர் கேரக்டர்களை போஸ்டர்களாக வெளியிட்டது. 


இந்நிலையில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, கன்னடத்தில் ஜெயந்த் கைகினி, மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் ஆகியோர் படத்திற்கான முன்னுரை குறித்த உரையை பேசி உள்ளனர். 






இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் முன்கூட்டியே ஸ்பாட்டிஃபை செயலியில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சோழா சோழா, பொன்னி நதி வெளியான நிலையில் தற்போது சொல், அலைகடல், தேவராளன் ஆட்டம், ராட்சச மாமனே ஆகிய 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.