பொன்னியின் செல்வனின் கதையை கிட்டதட்ட  40 ஆண்டுகளாக மறக்காமல் நினைவில் வைத்திருப்பதாக இயக்குநர் மணிரத்னம்(Maniratnam) கூறியுள்ளார். 


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தநிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. 






கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 






பொன்னியின் செல்வன் டீசர்(Ponniyin Selvan Teaser) வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற்றது. முன்னதாக நடிகர்கள் சரத்குமார், கார்த்தி, விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்று படத்தைப் பற்றி பேசினர். இவர்களைத் தொடர்ந்து  பேசிய படத்தின் இயக்குநர் மணிரத்னம், கல்லூரி படிக்கும் போது இந்த நாவலை படித்தேன். முதலின் என் நன்றியை கல்கிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன். முதலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டியது. ஆனால் அவர் ஏன் எடுக்கவில்லை இப்போது தான் புரிகிறது. 


எங்களுக்காக அதை விட்டு வைத்து விட்டு சென்றுள்ளார் என புரிந்துள்ளது. பல பேர் பொன்னியின் செல்வன் படம் எடுக்க முயன்ற நிலையில் நானே 3 தடவை முயன்றுள்ளேன். அதனால் இதன் மதிப்பு எனக்கு தெரியும். கொரோனா சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க முழுக்க ஒரு அழுத்தத்தில் தான் எடுக்க முடிந்தது. இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் பொன்னியின் செல்வன் இல்லை என மணிரத்னம் கூறியுள்ளார்.