‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின்  2  ஆவது நாள் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. 


ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கல்கி ஆகச்சிறந்த படைப்பான ‘ பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படம் நாவலை படித்தவர்கள் மத்தியிலும் சரி, படிக்காதவர்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


 


                                   


இதனிடையே அண்மையில் இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விவரங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் வெளியான அன்றைய நாளில் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


 






இந்த நிலையில் தற்போது படத்தின் 2 ஆவது நாள் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தத்தகவல்களின் படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாவது நாளில் 150 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் என்ற வீதம் மூன்று நாளுக்கு 30 லட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 


 






முன்னதாக, கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவியமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. 


அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதனைத்தொடந்து பல்வேறு இடங்களுக்கு சென்று பிரோமோஷன் தொடர்பான பணிகளும் பரபரப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.