’பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற ரஜினி - கமல் தொடர்பான மேஷ்அப் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.  இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது. 


இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  ‘சோழா சோழா’ பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் இந்திய சினிமாவின் ஐகான்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். 


 






இவர்களை கெளரவிக்கும் வகையில் நிகழ்வில் மேஷப் ஒன்று ஒளிப்பரப்பபட்டது. அந்த மேஷ் அப்பானது மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி மற்றும் கமல் நடித்த நாயகன் ஆகிய இரு படங்களில் இடம் பெற்ற காட்சிகளை கொண்டு எடிட் செய்யப்பட்டு இருந்தது. நேற்று இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது. இந்த நிலையில் பலர் அந்த மேஷ்அப்பை கட் செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.  


 


 






நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது: 


நிகழ்ச்சியில் ரஜினி பேசும் போது, “ பொன்னியின் செல்வன் கதை ஒரு புரட்சி கதை. இப்படிப்பட்ட கதையை அப்போது இருந்த ஜாம்பாவான்களான மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி வாசன் ஆகியோர் படமாக்க முயற்சி எடுக்க வில்லை. அதற்கு காரணமாக என்ன இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றால் இதை ஒரே படமாக எடுக்க முடியாது. அப்போது பார்ட் 1, பார்ட் 2 கான்செப்ட் தெரியாது. அதனாலத்தான் அதை எடுக்கவில்லை. இல்லையென்றால் இப்படி ஒரு மாணிக்கத்தை விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அதை தவிர எம்.ஜி.ஆர், கமலும் இதை படமாக எடுக்க முயற்சி செய்தார்கள்.


என்ன காரணம்? 


ஆனால் அவர்களால் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும். அதைத்தொடர்ந்து நிறைய பேர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் எடுக்க முடியவில்லை. ஆனால் தற்போது சுபாஷ்கரன் பொன்னியின் செல்வனை படமாக எடுத்து வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். இன்னும் தமிழ் சினிமா 1000 வருடங்களை கடந்தாலும், சுபாஷ்கரன் சாதனை நினைவுக்கூறப்படும்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்திய தேவன்  கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும் என வார இதழ் ஒன்றின் மூலம் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர்  'ரஜினிகாந்த்' என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார். அதைக் கேட்டதும் எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்று தான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன் என ரஜினி தெரிவித்தார். 


வாய்ப்பு கேட்ட ரஜினி 


மேலும் இந்த படத்தை முன்பே மணி பிளான் பண்ணும் போது பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணியிடம் கேட்டேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. இதில் நீங்க நடிச்சிங்கன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா .. உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான் விரும்பவில்லை என கூறினார். வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அது தான் மணிரத்னம் எனவும் தெரிவித்தார். அதேசமயம்  பழுவேட்டையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது எனக்கு தோன்றியது. 


 






பொன்னியின் செல்வனில் 40வது அத்தியாயத்தில் தான் அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்த படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணி ரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என தெரிவித்த ரஜினி, இந்த கதையில் நந்தினி தான் எல்லாமே. அதனால் படத்திற்கு பொன்னியின் செல்வி என பெயர் வைத்து இருக்க வேண்டும். இதை வைத்து தான் படையப்பா படத்தில் உள்ள நீலாம்பரி கதாபாத்திரம் உருவானது என்றும் ரஜினி தெரிவித்தார்.


கமல்ஹாசன் பேச்சு


இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பேசும் போது,  “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணிரத்னம் பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் என்னை இந்தக்கதையை சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார். அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது.  நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை. அந்த வருத்தம் இருக்கிறது. 


மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை. ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கிறோம். அது மாதிரிதான் இந்த படம்.  இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதை கேட்ட எனக்கு ஷாக்கா இருந்தது. 


 






ஏன் என்றால் அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டு விட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று  ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்கும் படியாக  அமைந்து இருக்கிறது. வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்து  கொள்ள வேண்டும்.AR.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன்” என்று பேசினார். 


இந்நிகழ்ச்சியில் மேடையில் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான படங்களின் பாடல்கள் இடம் பெற்றது. அப்போது ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற யாக்கைத் திரி பாடலும் பாடப்பட்ட, படத்தில் அப்பாடலில் ஆடிய சித்தார்த், த்ரிஷா ஆகியோர் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலானது.